மார்ச் 6: விழுப்புரத்தில்-அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு
விழுப்புரம்: விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழா மார்ச் 6 -ம் தேதி நடைபெறும் என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புதன்கிழமை தெரிவித்தார்.
அதே தினத்தன்று கலைஞர் அறிவாலயமும் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பொன்முடி விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
விழுப்புரத்தில் மாவட்ட தி.மு.க. சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. இதன் தரைத்தளத்தில் மாவட்ட தி.மு.க. அலுவலகமும், விருந்தினர் மாளிகையும் அமைய உள்ளது.
முதல் தளத்தில் குளிர்சாதன வசதியுடன் 1200 பேர் அமரக் கூடிய திருமண மண்டபம் மற்றும் 800 பேர் அமர்ந்து உண்ணும் வசதி கொண்ட உணவுக் கூடமும் அமைக்கப்படும். மார்ச் 6-ம் தேதி இதன் திறப்பு விழா நடைபெறுகின்றது.
இந்த விழாவில், தமிழக முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய , மாநில அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதே நாளில் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவும் நடைபெற உள்ளது. இதில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள். அன்று விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications