பதவி இல்லை-தீக்குளிக்க முயன்ற அதிமுக பிரமுகர்
நெல்லை: கட்சியி்ல் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்த நெல்லை அதிமுக பிரமுகர் தீக்குளிக்க முயன்று கைதானார்.
நெல்லை மாநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள் அனைவரும் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 22-வது வார்டுக்கும் நிர்வாகிகள் தேர்தல் சமீபத்தில் நடத்தப்பட்டது.
அதில், பாளையங்கோட்டை சிவன் தெற்கு மாடவீதியைச் சேர்ந்த அருணாசலம் (64) என்பவருக்கு பதவி கிடைக்கவில்லை என்றும், பாளை. 22-வது வார்டில் அ.தி.மு.க. மேலமைப்பு பிரதிநிதியாக செயல்பட்டு வந்த அவருக்கு பொறுப்பில் தொடர அனுமதி மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அருணாசலம் நேற்று காலை பாளை. மார்க்கெட் அருகே உள்ள புறக்காவல் நிலையத்துக்கு திடீர் என்று மண்எண்ணை கேனுடன் வந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரிடம் நான், தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று கூறி மண்எண்ணை கேனுடன் அந்தப் பகுதியில் ஓடினார்.
பின்னர் நடுரோட்டில் நின்றுகொண்டு தலையில் மண்எண்ணையை ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அருணாசலத்தை விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் அவரை பாளை. போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது போலீஸாரிடம் அருணாச்சலம் கூறுகையில்,
எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியது முதல் அ.தி.மு.க.வில் இருந்து வருகிறேன். 22-வது வார்டு நிர்வாகியாக செயல்பட்டு வந்த எனக்கு அந்தப் பதவியில் தொடர அனுமதி அளிக்க முடியாது என்று மறுப்பு தெரிவிக்கின்றனர்.
மற்ற கட்சிகளில் இருந்து வந்தவர்களுக்கும், கடந்த தேர்தலில் பிற கட்சிகளுக்கு வேலை செய்தவர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகிறது.
எம்.ஜி.ஆரின் விசுவாசிகளுக்கு கட்சியில் மரியாதை கொடுப்பது இல்லை. எனவே அ.தி.மு.க. உள்கட்சி தேர்தலை நேர்மையாக நடத்த வேண்டும் என்றார்.
பின்னர் அருணாச்சலம் தற்கொலைக்கு முயன்றதாக கூறி கைது செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications