மர்மமாக எரிந்த அதிமுக எம்பி மைத்ரேயனின் கார்!

அதிமுக ராஜ்யசபா எம்பியான டாக்டர் மைத்ரேயனின் வீடு சென்னை பெசன்ட் நகர் 1வது அவின்யூவில், சாஸ்திரி நகர் காவல் நிலையம் எதிரே உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் அதிமுக உட்கட்சி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று தென் சென்னை மாவட்டத்தின் 8 பகுதிகளுக்கான நிர்வாகிகள் தேர்தல் தொடர்பான பணிகளில் மைத்ரேயன் ஈடுபட்டார்.
ராஜா அண்ணாமலைபுரம், அருணா திருமண மண்டபத்தில் 8 பகுதிகளுக்கும் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க ஏராளமான அதிமுகவினர் மனுத் தாக்கல் செய்தனர். இந்தப் பணிகளை மேற்பார்வையிட்ட மைத்ரேயன் நேற்றிரவு வீடு திரும்பினார்.
தனது குவாலிஸ் காரை போர்டிகோவில் நிறுத்தி விட்டுச் சென்றார். அதிகாலை 2.15 மணியளவில் அவரது கார் தீப் பிடித்து எரிந்து கொண்டிருந்தது.
அதை அணைக்க முயன்ற மைத்ரேயனுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. போலீசாருக்கும் தீயணைப்புப் படையினருக்கும் தகவல் தரப்பட்டு அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.
ஆனால், காரின் முன்பக்கம் முழுவதும் எரிந்து சேதமடைந்துவிட்டது. மேலும் அருகே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனமும் சேதமடைந்தது.
போர்டிகோவில் இருந்த டியூப்லைட்டுகள், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறிவிட்டன.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் மின் கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா அல்லது உட்கட்சித் தேர்தல் நடக்கும் நிலையில் யாராவது வேண்டுமென்றே தீ வைத்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.
தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவிகளைத் தந்து வருவதாக உட்கட்சித் தேர்தல் பொறுப்பாளர்களாக உள்ள மைத்ரேயன் மீதும், ஆதிராஜாராம் மீதும் சில அதிமுகவினர் தலைமையிடம் புகார்கள் அடுக்கியுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications