இந்தியர் கொலை: இனவெறி தாக்குதல் இல்லை-ஆஸி
சிட்னி: மெல்போர்ன் நகரில் இந்தியர் படுகொலை செய்யப்பட்டதற்கு ஆஸ்திரேலிய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. அதேசமயம், இது இனவெறித் தாக்குதல் இல்லை என்று ஆஸ்திரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.
மெல்போர்ன் நகரில் தான் வேலை பார்த்து வந்த ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்தபோது நிதின் கார்க் என்ற 21 வயது இந்திய மாணவர் குத்திக் கொல்லப்பட்டார். இதனால் ஆஸ்திரேலியாவில் படித்து வரும் இந்தியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து இந்தியர்கள் மீது அங்கு தாக்குதல்கள் நடந்து வரும் நிலையில் தற்போது கொலை விழுந்துள்ளது இந்தியர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ஜூலியா கில்லார்ட் கூறுகையில், இந்த சம்பவத்தை நான் கடுமையாக கண்டிக்கிறேன்.
சர்வதேச மாணவர்களை இந்த நாடு முழு மனதுடன் வரவேற்கிறது. அனைவரையும் மனதார வரவேற்கிறோம் என்றார்.
ஆஸ்திரேலியாவுக்கு நிலக்கரி, இரும்புத் தாது ஆகியவற்றுக்குப் பிறகு பெருமளவில் வருமானம் தேடித் தருவது சர்வதேச மாணவர்கள்தான். 2007-08ம் ஆண்டில் சர்வதேச மாணவர்களின் மூலம் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைத்த வருவாய் 13 பில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருவதால் ஆஸ்திரேலியாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. இதனால் ஆஸ்திரேலிய அரசு கவலை அடைந்துள்ளது.
இனவெறித் தாக்குதல் இல்லை-போலீஸ்:
இதற்கிடையே, நிதின் கார்க் இனவெறித் தாக்குதலுக்குப் பலியாகவில்லை. இது ஒரு சாதாரண குற்றச் செயல்தான் என்று ஆஸ்திரேலிய போலீஸார் கூறுகின்றனர்.
விக்டோரியா மாகாண காவல்துறை அதிகாரி டேவ் சினேர் இதுகுறித்துக் கூறுகையில், இது முற்றிலும் குற்றச் செயல் மட்டும்தான். இனவெறித் தாக்குதலாகத் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.












Click it and Unblock the Notifications