சென்னை பெண்கள் பள்ளிக்கு குண்டு மிரட்டல்- பீதி
சென்னை: சென்னையில் உள்ள பெண்கள் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பெரம்பூரி்ல் லூர்து மெட்ரிகுலேஷன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இன்று காலை பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர் அறைக்கு தொலைபேசி மூலமாக மர்ம நபர் கூறினார்.
அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து இன்று திங்கள்கிழமை பள்ளிக்கூடம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் நிர்வாகத்தினர் அதிர்ச்சிக்குள்ளானார்கள்.
உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு படையினர் மற்றும் மோப்ப நாயுடன் போலீசார் பள்ளி வளாகத்தில் குவிந்தனர்.
பள்ளியில் இருந்த 1500க்கும் மேற்பட்ட மாணவிகளை பத்திரமாக வெளியேற்றிவிட்டு பள்ளி முழுவதும் சல்லடை போட்டு வெடிகுண்டு இருக்கிறதா என சோதித்தனர்.
வெடிகுண்டு மிரட்டலால் பீதியடைந்த பள்ளி மாணவிகள் அருகில் இருந்த சர்ச்சில் பயத்துடன் அமர்ந்திருந்தனர். அதற்குள் தகவல் அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளி முன்பாக குவந்துவிட்டனர்.
ஏராளமான பெற்றோர் தங்களின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டனர். லுர்து பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக பெரம்பூர் முழுக்க தகவல் பரவி அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்பநாய் ராஜா உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினர். சுமார் 3மணி நேரம் சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications