முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கு- 5 முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு மரண தண்டனை உறுதி
டாக்கா: வங்கதேச முன்னாள் அதிபர் முஜிபுர் ரஹ்மான் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 5 முன்னாள் ராணுவ அதிகாரிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற வங்கதேச சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்காளதேசம் 1971-ம் ஆண்டு இந்தியாவின் உதவியுடன் தனி நாடானது. தனி நாடு கோரி போராட்டம் நடத்திய முஜிபூர் ரஹ்மான் முதல் அதிபர் ஆனார்.
1975-ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மான் அவரது வேலைக் காரர்கள் மற்றும் சில ராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். அந்த சமயத்தில் அவரது மகள்கள் ஷேக் ஹசீனா, ஷேக் ரெஹைனா இருவரும் வெளி நாட்டில் இருந்ததால் உயிர் தப்பினார்கள்.
முஜிபூர் ரஹ்மானை திட்டமிட்டு கொலை செய்ததாக 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் 6 பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவர்களில் ஒருவர் இறந்து விட்டார்.
அவரைத் தவிர மற்ற ஐவரான லெப்டினென்ட் கர்னல்கள் சையத் பரூக் ரஹ்மான், சுல்தான் ஷரியார் ரஷீத் கான், முஹயுதின் அகமது, ஏ.கே.எம். மொஹியுதின், மேஜர் பஸ்லுல் ஹூடா ஆகியோர் மீது விசாரணை நடந்து வந்தது.
முஜிபூர் ரஹ்மானுடன் 28 பேர் கொல்லப்பட்ட இந்த வழக்கில் உடனடியாக குற்றவாளிகள் தண்டிக்கப் படவில்லை. ராணுவ புரட்சிகள் அடுத்தடுத்து ஏற்பட்டதால் ராணுவ ஆட்சியாளர்கள், முஜிபூர் ரஹ்மான் கொலையாளிகளை கண்டு கொள்ளவில்லை.
1996-ம் ஆண்டு முஜிபூர் ரஹ்மானின் மகள் ஹசீனா பிரதமரானார். அதன் பிறகே 21 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கு சூடு பிடித்தது. 1998-ல் 15 பேருக்கு டாக்கா கீழ்கோர்ட்டு மரண தண்டனை விதித்தது.
அதை எதிர்த்து ராணுவ அதிகாரிகள் அப்பீல் செய்தனர். சுப்ரீம் கோர்ட்டில் அந்த மனு மீது விசாரணை நடத்தி வந்தது.
விசாரணைக்குப் பின்னர், ஐந்து பேரின் அப்பீல் மனுக்களையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. மேலும் அவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றுமாறும் உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து ஐந்து பேரின் மரண தண்டனையை நிறைவேற்றத் தேவையான வாரண்ட் உத்தரவில் டாக்கா மாவட்ட செஷன்ஸ் நீதிபதி முகம்மது இக்பால் கபூர் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த உத்தரவு ஐந்து பேரும் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்த 21 அல்லது 28 நாட்களுக்குள் ஐந்து பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.












Click it and Unblock the Notifications