ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தேர்தல் பணியாற்ற தடை- தேர்தல் கமிஷனுக்கு ஜெ. கோரிக்கை

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்:
தமிழ்நாடு அரசு அண்மையில் பிறப்பித்துள்ள அரசாணையின்படி, காலியாக உள்ள அரசு பணியிடங்களில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு நியமிக்கப்படும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டால் அவர்கள் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு மீண்டும் பணியமர்த்தப்படும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் திமுக அரசுக்கே விசுவாசமாக செயல்பட்டு தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடுவார்கள்.
ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் நியமிக்கப்படுவதால் கவர்னர் அல்லது ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் வர மாட்டார்கள். ஆளும் கட்சியின் கருணையால் மட்டுமே அவர்கள் செயல்படுவார்கள். தேர்தல் முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது அரசு சட்டதிட்டங்களின்படி எந்தவித நடவடிக்கையும் எடுக்க இயலாது. ஒப்பந்தத்தின் ஷரத்துக்கள்படியே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே கவர்னர் அல்லது ஜனாதிபதியின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் செயல்படும் அரசு ஊழியர்களை மட்டுமே தேர்தல் பணியில் நியமிக்க வேண்டியது அவசியமாகும். தேர்தல்கள் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற மேற்கூறிய விஷயத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை தேர்தல் பணியிலிருந்து விலக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications