கோவை-ரூ118 கோடியில் 3840 அபார்ட்மென்ட்டுகள்
கோவை: கோவையில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, ஏழை மக்களுக்காக ரூ. 118 கோடி செலவில் 3,840 அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்படவுள்ன.
மேலும் கோவை மாநகர் மற்றும் சுற்றுப்புறச் சாலைகள் ரூ. 59.85 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
கோவையில் 2010 ஜூன் திங்களில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையொட்டி, மாநாடு நடைபெறக்கூடிய கொடீசியா வளாகம் அமைந்துள்ள சேலம்-கொச்சின் சாலையை இணைக்கும் கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம் ஆகியவற்றுக்கான சாலைகள்;
மாநாட்டுத் திடலின் அருகே தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சித்ரா குரும்பாளையம் சாலை மற்றும் சிங்காநல்லூர் பேருந்து நிலையம், கோவை மத்தியப் பேருந்து நிலையம்,
இராமநாதபுரம் மற்றும் போத்தனூர் ரயில் நிலையம் ஆகியவற்றிற்குச் செல்லும் சாலைகள் முதலான நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுப் புறங்களில் அமைந்துள்ள 96 கிலோ மீட்டர் நீளமுடைய 72 சாலைகளை ரூ. 59.85 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
இதே போல ஜவஹர்லால் நேரு தேசிய நகர சீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக கோவையில் உள்ள ஏழை மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் எனும் திட்டத்தின் கீழ், உக்கடத்தில் ரூ. 68 கோடி செலவில் 2,232 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும்,
அம்மன்குளம் என்ற இடத்தில் ரூ. 50 கோடி செலவில் 1,608 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுவதற்கும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி மொத்தம் ரூ.118 கோடி செலவில் 3,840 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications