பிரபாகரன் படம்-அரசுக்கு இளங்கோவன் கேள்வி
சென்னை: பிரபாகரன் படத்தை வைக்க தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னையில் தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கு நடந்தது. அதில் பேசிய இளங்கோவன்,
திருமாவளவனை எனக்கு மிகவும் பிடிக்கும். புலி, சிங்கம் படத்துக்கு நடுவில் திருமா படத்தை வைத்திருப்பார்கள். திருமா ஒரு துடிப்பான இளைஞர், அவர் தன்னிடம் உள்ள இளைஞர்களை நல்வழிக்கு கொண்டு செல்ல வேண்டும்.
தீவிரவாதிகளை ஒழிக்க முதல்வரால் முடியும். தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசுபவர்கள் அனைவரும் உங்களை (முதல்வர் கருணாநிதி) கெட்டவர்கள் என்று தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
பிரபாகரன் படத்தை வைக்க தமிழக அரசு எப்படி அனுமதிக்கிறது?. முதல்வர் யாருக்கும் பயப்பட வேண்டாம், யோசிக்கவும் வேண்டாம். எங்கள் தலைமை சொல்லும் வரைக்கும் எல்லா விஷயத்திலும் ஒத்துழைப்போம்.
பிரபாகரன் படத்தை வைக்க அனுமதிக்காதீர்கள். தீவிரவாதிகள் வளருவது நாட்டுக்கு நல்லதல்ல. தீவிரவாதத்தை ஆதரிக்கும் வைகோ அவர்கள், பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்கிறார். சுபாஷ் சந்திரபோஸ் முடிவைப் போல இந்த விஷயத்தை கொண்டு போகிறார் வைகோ. அதோடு மக்களையும் ஏமாற்றுகிறார் வைகோ. பிரபாகரன் புகழை வைகோ ஏன் தமிழத்தில் பாடிக் கொண்டிருக்கிறார். பிரபாகரன் புகழை பரப்புவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
நாங்கள் தீவிரவாதிகளுக்கோ குண்டுகளுக்கோ பயப்பட மாட்டோம், ராஜீவ் காந்தியை போல் எங்களையும் கொல்ல நினைக்கிறார்கள். அது நடக்காது. இலங்கையில் தமிழன் வாழ காங்கிரஸ் தான் காரணம், இதை மாற்றி பொய்யான பிரச்சாரதை மக்களிடம் பரப்புகின்றனர். பணம் வருகிறது என்பதற்காக புலிகளுக்கு ஆதரவாக பேசுகிறார்கள்.
வைகோ திருமாவுக்கு ஒரு கேள்வி. ஏன் பிரபாகரனுக்கு ஆதரவாக பேசுகிறீர்கள்? வைகோ ஒரு கட்சியிலும் நிரந்தரமாக இருந்ததில்லை. முதலில் திமுகவில் இருந்து விலகி அவர்களிடமே பின்னர் சரணடைந்தார். பின்னர் பெண் பிசாசு என்று ஜெயலலிதாவை வர்ணித்த வைகோ, அவர் முந்தாணையை பிடித்துக்கொண்டார்.
திராவிட கழகத்தையே சுற்றி சுற்றி வந்த வைகோ, காங்கிரஸ் பக்கம் வந்திருந்தால் நல்லவர் என்று ஏற்றுக் கொண்டிருப்போம் என்றார் இளங்கோவன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு பேசுகையில்,
இந்திரா காந்தி, மகாத்மா காந்தியை எப்படியை தீவிரவாதிகள் கொன்றார்களோ, அப்படித்தான் ராஜீவ் காந்தியும் கொல்லப்பட்டார். இலங்கை தமிழர்களுக்காக நாம் பாடுபட்டோம். ஆனால் இலங்கைத் தமிழர்களே நம் தலைவரை கொன்றுவிட்டார்கள்.
இதை காங்கிரஸ் கட்சியினர் எப்போதும் மறக்க மாட்டார்கள். இந்தியாலேயே தமிழகம் தான் அமைதி பூமியாக இருக்கிறது இது நமக்கு பெருமை. எந்த விதத்திலும் காங்கிரஸ் தலைமை தீவிரவாதிகளை அனுமதிக்காது.
இலங்கை மக்களை காங்கிரஸ் கட்சிதான் காப்பாற்றுகிறது. இதை மறைத்து மக்களை ஏமாற்ற சதி நடக்கிறது.
எங்களுக்கு மிரட்டல் என்பது சாதாரணமான விஷயம். இந்த கூட்டம் முடிந்தம் போன் மூலமாக பல மிரட்டல் வரும் அதைப்பற்றி நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஏன் என்றால் நாங்கள் அனைவரும் தலைவர் ராஜீவ் காந்தி வழியில் வந்தவர்கள். எதற்கும் பயப்படமாட்டோம். எதையும் எதிர்த்து போராடுவோம்.
எங்களை பேசினாலும் சரி, ஏசினாலும் சரி இரண்டையுமே ஏற்றுக் கொள்வோம். ஏனென்றால் தமிழக மக்கள் வாழ வேண்டும் என்பதே எங்களின் விருப்பம் என்றார்.












Click it and Unblock the Notifications