டெல்லியில் மூடுபனி - விமானங்கள் தாமதம்- சென்னையில் அமைச்சர்கள், பயணிகள் தவிப்பு
சென்னை: மூடுபனி காரணமாக டெல்லி செல்ல வேண்டிய விமானங்கள் பல மணி நேரம் தாமதமானதால், சென்னையிலிருந்து டெல்லி செல்ல வேண்டிய பயணிகள், மத்திய அமைச்சர்கள் தவிக்க நேரிட்டது.
டெல்லி உள்பட வட மாநிலங்களில் கடும் பனி மூட்டம் நிலவுகிறது. இதனால் விமானப் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்று சற்று பனி மூட்டம் குறைவாக இருந்தபோதிலும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு டெல்லியிலிருந்து விமானங்கள் இயக்கப்படவில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் அந்தமானில் இருந்து சென்னைக்கு மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, சச்சின் பைலட் ஆகியோர் மாலை 3 மணிக்கு வந்தனர். பின்னர் சென்னையில் இருந்து 5.55 மணிக்கு டெல்லி செல்ல காத்திருந்தனர்.
டெல்லியில் கடுமையான பனிபொழிவால் விமானம் தாமதமாக இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இந்த விமானத்தில் பரூக், பைலட் உள்பட 117 பேர் செல்ல தயாராக இருந்தனர். டெல்லியில் பனிமூட்டம் அதிகமாக உள்ளதால் விமானம் ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து மத்திய அமைச்சர்கள் உள்பட அனைத்து பயணிகளும் விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் நேற்று காலை 6 மணிக்கு மத்திய அமைச்சர்கள் உள்பட பயணிகள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். சுமார் 12 மணி நேர தவி்ப்புக்குப் பின்னர் இவர்கள் டெல்லி போய்ச் சேர்ந்தனர்.
இதேபோல் சென்னையில் இருந்து நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கொழும்பிற்கு விமானம் செல்ல வேண்டும். இதில் செல்ல 167 பயணிகள் காத்திருந்தனர். ஆனால் டெல்லியில் இருந்து வரவேண்டிய விமானம் வராததால் தாமதமாக புறப்பட்டு செல்லும் என தெரிவிக்கப்பட்டது.
நள்ளிரவு 2.45 மணி வரை விமானம் வராததால் விமான சேவை ரத்து செய்யப்படுவதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் கோஷம் போட்டனர். இதனால் விமான நிலையம் பரபரப்பாக இருந்தது. அவர்களில் 90 பயணிகள் வேறு விமானத்தில் காலை 7 மணிக்கு கொழும்பிற்கு சென்றனர். 40 பயணிகள் பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டனர். மீதமுள்ள பயணிகள் இன்று செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.












Click it and Unblock the Notifications