பாஸ்போர்ட் பெற ஆள் மாறாட்டம் செய்தவர் கைது
கடையநல்லூர்: கடையநல்லூரில் ஆள் மாறாட்டம் செய்து பாஸ்போர்ட் பெற முயன்றவர் கைது செய்யப்பட்டார்.
கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை சேர்ந்தவர்கள் அய்யாத்துரை, காளிபாண்டி. அய்யாத்துரை சிங்கபூரில் பணிபுரிந்து வருகிறார். காளிபாண்டி சுற்றுலா விசா மூலம் மலேசியாவில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் அவர் விசா காலம் முடிந்த பிறகும் இந்தியாவுக்கு திரும்பி வராமல் தொடர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். இதையடுத்து மலேசியா போலீசார் காளிப்பாண்டியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தண்டனை காலம் முடிவடைந்ததும் மலேசியாவில் இருந்து காளிப்பாண்டி இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். அதன் பிறகு அவர் கடந்த சில மாதங்களாக கடையநல்லூரில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் மீண்டும் வெளிநாடு செல்ல விரும்பினார். ஆனால், பாஸ்போர்ட்டை அரசு முடக்கிவிட்டதால் ஆள் மாறாட்டம் செய்து புதிய பாஸ்போர்ட், விசா வாங்க முடிவு செய்தார்.
அதன்படி சிங்கபூரில் வேலை பார்த்து வரும் அய்யாத்துரையின் வீட்டு ரேசன் அட்டையை வாங்கினார். அதில் அய்யாத்துரை மற்றும் அவரது குடும்பத்தினரின் விபரம் குறிப்பிடப்பட்டிருந்தது.
தன்ணை அய்யாத்துரை எனக் கூறி ரேஷன் கார்டு நகல் உள்ளிட்ட ஆவணங்களுடன் பாஸ்போர்ட் பெற காளிப்பாண்டி விண்ணப்பித்தார். முகவரி மற்றும் விவரங்களை சரி பார்க்க கடையநல்லூர் போலீஸ் ஏட்டு கிருஷ்ணன் அய்யாத்துரை வீட்டிற்கு வந்தார்.
அப்போது அய்யாத்துரை பெயரில் ஆள்மாறாட்டம் செய்து பாஸ்போர்ட் பெற காளிப்பாண்டி முயற்சிப்பது தெரிய வந்தது. இதனை தொடர்நது ஆள்மாறாட்ட மோசடி செய்ததாக காளிப்பாண்டி கைது செய்யப்பட்டு தென்காசி சப்-ஜெயிலில் அடைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications