இடைத் தேர்தல்-திணிக்கப்படும் வாரிசுகள்!
சென்னை: தமிழக இடைத் தேர்தல்களில் வாரிசு அரசியல் விஸ்வரூபம் எடுத்து வியாபித்து வருகிறது.
முன்பெல்லாம் தங்களது வாரிசுகளை திணிப்பதிலும், நுழைப்பதிலும் அரசியல்தலைவர்கள் சற்று யோசித்து செயல்படுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் அது சர்வ சகஜமாகி விட்டது.
இந்தக் கட்சி, அந்தக் கட்சி என்ற பாகுபாடில்லாமல் கிட்டத்தட்ட அனைத்துக் கட்சியிலுமே வாரிசுகளின் ராஜ்ஜியம் அதிகரித்து விட்டது.
அதிலும் சமீப காலமாக நடந்து வரும் இடைத் தேர்தல்களில் கிட்டத்தட்ட வாரிசுகள்தான் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தலில் பாமக தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரன் வேட்பாளாரக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை அறிமுகம் செய்து வைத்தவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ்.
இதன் மூலம் ராமதாஸ் - மணிக்குப் பிறகு அன்புமணி - தமிழ்க்குமரன் என்பதைக் கோடிட்டுக் காட்டியுள்ளதாக பாமகவினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது. அன்புமணி இதுவரை நேரடியாக எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டு ஜெயித்ததில்லை. ராஜ்யசபா மூலமாகவே அவர் நாடாளுமன்றம் போயுள்ளார்.
அதேசமயம், தமிழ்க்குமரன், திமுக, அதிமுக, தேமுதிக என முப்பெரும் மலைகளுடன் மோத வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இதுதவிர சமீபத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் திமுகவும் சரமாரியாக வாரிசுகளுக்கு வாய்ப்பளித்து வருகிறது.
வந்தவாசி தொகுதியில் மறைந்த ஜெயராமனின் மகன் கமலக்கண்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பென்னாகரம் தொகுதியிலும் மறைந்த பெரியண்ணனுக்குப் பதில் அவருடைய மகன் இன்பசேகரன்தான் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
திருமங்கலத்தில் நடந்த இடைத் தேர்தலில் மறைந்த அதியமானுக்குப் பதில் அவருடைய மனைவி லதா நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications