கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு ஷிப்ட் ஆகும் மின் நிலையம்

கர்நாடகத்தின் கார்வார், ஹனகோனாவில் இந்த மின் நிலையம் அமையவிருந்தது. தற்போது தூத்துக்குடிக்கு இது இடம் பெயருகிறது.
இதுகுறித்து நிறுவனத்தின் செயல் இக்குநர் ஏ.என்.வாசு ராவ் கூறுகையில், உள்ளூர் மக்களின் ஆதரவின்மையாலும், தேவையில்லாத தாமதங்களாலும் எங்களது திட்டத்தை கார்வாரிலிருந்து தூத்துக்குடிக்கு மாற்ற திட்டமிட்டுள்ளோம் என்றார்.
சமீப காலங்களில், கர்நாடகத்தில் தடைபட்டுள்ள 2வது மிகப் பெரும் மின் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007ம் ஆண்டு மைசூரில், 1000 மெகாவாட் திறன் கொண்ட சமல்புரா அணல் மின் நிலையத் திட்டமும், உள்ளூர் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த் பாரத் நிறுவனத்தின் அணல் மின் நிலையத் திட்டம் 2004ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் 300 மெகாவாட் திறனுடைய மின் நிலையம் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. பின்னர் இது 400 மெகாவாட் ஆக உயர்த்தப்பட்டது.
மத்திய, மாநில அரசுகளின் அனுமதியைப் பெற்று விட்ட இந்த் பாரத் நிறுவனம், மாநில சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதிக்காக காத்திருந்தது.
இந்த நிலையில் உள்ளூர் மக்களும், சுற்றுச்சூழல் வாதிகளும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த ஆண்டு தொடக்கத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. கும்பலைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூட்டில் இறங்க நேரிட்டது.
அதன் பிறகும் கூட தொடர்ந்து வன்முறைகள் நடந்து வந்தன.
பின்னர் இந்தப் போராட்டத்தில் மேதா பட்கர் கை கோர்த்தார். பிற அரசியல் கட்சிகளும், அரசியல் சாரா அமைப்புகளும் கூட குதித்ததால் நிலைமை மோசமானது.
இதையடுத்தே தற்போது தூத்துக்குடிக்கு தனது திட்டத்தை மாற்றி விட்டது இந்த் பாரத் நிறுவனம்.
இந்த்-பாரத் நிறுவனத்தின் இந்த புதிய மின்னுற்பத்தி திட்டத்தில் இந்திய - வெளிநாட்டு நிலக்கரி 20: 80 என்ற விகிதத்தில் பயன்படுத்தப்படும். தூத்துக்குடி துறைமுகம் இதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பதாலும் இந்த திட்டம் இங்கு அமைகிறது.
இந்த்-பாரத் நிறுவனம் ஏற்கெனவே 375 மெவா திறன் கொண்ட மின் உற்பத்தி தொழிற்சாலையை இயக்கி வருகிறது. இதனை 3000 மெகா வாட் திறனுக்கு உயர்த்தும் திட்டமும் உள்ளது. ஓரிஸாவில் ரூ 2600 கோடியில் 800 மெகா வாட் மின்சார நிலையம் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
கடந்த அக்டோபரில்தான் இந்த நிறுவனம் 100 மில்லியன் டாலர் ஆரம்ப முதலீட்டை செகோயா கேபிடல், பெஸ்ஸமிர் வென்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் சிட்டி வென்ச்சர் கேபிடல் நிறுவனங்களிடமிருந்து பெற்றது.
ஏற்கெனவே இவை ரூ .300 கோடியை இந்த் - பாரத்துக்கு வழங்கியுள்ளன. பதிலுக்கு இந்த்-பாரத்தின் 18 சதவீத பங்குகளை இந்த ஆரம்ப முதலீட்டு நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.












Click it and Unblock the Notifications