தூத்துக்குடியில் 2 பள்ளி மாணவிகள் கடத்தல்
தூத்துக்குடி: பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த 2 மாணவிகளை கடத்தி மயக்க மருந்து கொடுத்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி சவேரியர்புரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த கண்ணன் மகள் மாரீஸ்வரி. அதே பகுதியை சேர்ந்த காந்தி என்பவர் மகள் பிரியா.
இருவரும் ஒரே பள்ளியில் படித்து வருகின்றனர். மாரீஸ்வரி 5ம் வகுப்பும், பிரியா 6ம் வகுப்பும் படித்து வருகின்றனர். தினமும் இருவரும் பள்ளிக்கு சேர்ந்தே செல்வது வழக்கம்.
இன்று காலை இருவரும் வழக்கம்போல் பள்ளிக்கு நடந்து சென்றபோது மாணவிகள் இருவரையும் சுமார் 30 வயது மதிக்கத்தக்க 3 பேர் கத்திமுனையில் மிரட்டி கடத்திச் சென்றதாக தெரிகிறது.
பாலதண்டாயுத நகரில் மறைவான ஒரு இடத்தில் மாணவிகள் இருவரையும் உட்கார வைத்து மயக்க மருந்து கலந்த தண்ணீரை குடிக்க வைத்துள்ளனர். அதை அரைகுறையாக குடித்த மாணவிகள் சமயோசிதமாக செயல்பட்டு கடத்தல்காரர்களிடம் இருந்து திடீரென தப்பியோடினர்.
பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள பகுதிக்கு சென்ற மாணவிகள், தாங்கள் கடத்தப்பட்டது குறித்து அங்கிருத்த கடைக்காரர்களிடம் கூறினர். இதைப் பார்த்தும் கடத்தல் பேர்வழிகள் ஓடி மாயமாகி விட்டனர்.
இந்நிலையில், மயக்க மருந்து கலந்த தண்ணீர் குடித்ததால் 2 மாணவிகளும் மயங்கி விழுந்தனர். மாணவிகளை தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொதுமக்கள் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் பேர்வழிகளை தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications