ஓய்வு பெற்ற ஊழியர்கள் மறு-நியமனம்: வைகோ எதிர்ப்பு

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அரசு பணிகளில் அத்தியாவசியமாக தேவைப்படும் பணியிடங்களுக்கு உரிய முறையில் பணியாளர்கள் தேர்வு செய்ய காலதாமதம் ஏற்படுவதால் பணிகள் தொய்வின்றி தொடர ஓய்வு பெற்றவர்களையே ஒப்பந்த அடிப்படையில் பணியில் நியமிக்க பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை வெளியிட்டுள்ள ஆணை கண்டனத்துக்குரியது. இந்த ஆணையினை நியாயப்படுத்தியுள்ள முதல்வரின் கருத்து ஏற்கத்தக்கதல்ல.
அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைவாய்ப்பு கேட்டு பதிவு செய்துள்ள 55 லட்சத்திற்கும் மேலானவர்கள் தங்களின் எதிர்காலத்தையே வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குள் தொலைத்துவிட்டு காத்திருக்கின்றனர்.
இப்பிரிவினரில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பித்தல் அடிப்படையில் பத்து முறைக்கும் மேல் தங்கள் பதிவைப் புதுப்பித்தவர்களும், ஐம்பது வயதைக் கடந்தவர்களும் பல லட்சம் பேர் ஆவர். வேலை கிடைக்காமல் பரிதவிக்கின்றவர்களும், அவர்களை படிக்க வைத்த பெற்றோரும் படுகிற வேதனைப்பாடுகள் அளவிட முடியாதது.
அந்த வேதனையைப் போக்கி, போர்க்கால அடிப்படையில் வேலை வாய்ப்பை உருவாக்கித் தந்து இளைய சமுதாயத்தினருக்கு வாழ்வு அளிக்கவும், தனிமனித வருவாயை உயர்த்தி அதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவவும் வேண்டிய அரசு, ஓய்வு பெற்றவர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்க ஆணை வெளியிட்டுள்ளது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் செயலே ஆகும்.
ஒருதுறையில் ஒருசில வேலைக்கு என்றே இந்த ஆணை வெளியிடப்பட்டதாக இருப்பினும் அந்த ஆணையை எல்லாத் துறையினரும் தங்களுக்கு ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு ஒப்பந்தப் பணிகளுக்கு தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு நிரம்ப உண்டு என்பதை மறுக்க இயலாது.
எனவே புதிய வேலைவாய்ப்புகளை இளைய வயதினருக்கு உருவாக்கித் தருவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இந்த அரசாணையை ரத்து செய்திட கேட்டுக் கொள்கிறேன்.
இந்திய ஆட்சிப்பணி போன்றவற்றிற்காக மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் குறிப்பிட்ட இடைவெளியில் சீரான முறையில் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்வதைப்போல், தமிழக அரசுப் பணிக்கும் மாநில தேர்வாணையம் மூலமோ வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமோ சீரான இடைவெளியில் தேவையான காலிப் பணியிடங்களை முன்கூட்டியே முறையாகத்திட்டமிட்டு நிரப்பிட தமிழக அரசு முன்வரட்டும் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications