எஸ்ஐ கொலை வழக்கு: 3 பேர் சிக்கினர், மேலும் 7 பேர் தலைமறைவு
நெல்லை: ஆழ்வார்குறிச்சி போலீஸ் எஸ்.ஐ வெற்றிவேல் கொலை வழக்கில் தேடப்பட்டவர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். மற்றொருவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் 7 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கடந்த 7ம் தேதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக 6 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கில் கடையம் எஸ்.ஐ சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சிவசுப்பிரமணியத்தின் மைத்துனர் கந்தசாமி, ஓய்வு பெற்ற எஸ்ஐ சண்முகசுந்தரம், ஆழ்வார்குறிச்சி கள்ளபிராண் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மேலும் கொலையில் தொடர்புடைய சிவசுப்பிரமணியனின் மனைவி சிவகாமி, மாமனார் ஆறுமுகதேவர், அவரது மகன்கள் சுப்பிரமணியன், முருகன், கண்ணன் உள்ளிட்ட 10 பேரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சிவகாமி மற்றும் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த ஐயப்பன் ஆகியோர் நேற்று மாலை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே சிவகாமியின் அண்ணன் சுப்பிரமணியன் நேற்று மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடையம் எஸ்ஐக்கு பாதுகாப்பு:
கடையம் எஸ்.ஐ சிவசுப்பிரமணியமும் அவரின் மனைவி சிவகாமியும் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர்.
இப்பிரச்னையில் சிவகாமியின் குடும்பத்தினர் சிவசுப்பிரமணியத்தை கொல்ல ரவுடிக் கும்பலை அனுப்பியதாகவும், தவறுதலாக எஸ்.ஐ வெற்றிவேலை ரவுடிகள் கொலை செய்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில், கொலையாளிகளின் உறவினர்களால் எஸ்.ஐ சிவசுப்பிரமணியனின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் அவரை இங்கிருந்து வேறு மாவட்டத்திற்கு மாற்ற நெல்லை டிஐஜி கண்ணப்பன், எஸ்பி ஆஸ்ரா கார்க் ஆகியோர் டிஜிபி லத்திகா சரனுக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து டிஜிபி லத்திகா சரண் நேற்று கடையம் எஸ்.ஐ சிவசுப்பிரமணியத்தை மரைன் துறைக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் அவரது பாதுகாப்புக்காக நவீன துப்பாக்கி ஏந்திய இரு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications