எட்டு மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள்!
டெல்லி: பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மேற்குவங்க ஆளுநராக நியமி்க்கப்படுகிறார். பஞ்சாப் ஆளுநராக முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் நியமிக்கப்படுகிறார்.
இதேபோல் சட்டீஸ்கர் மாநில ஆளுநராக முன்னாள் ராணுவச் செயலாளர் சேகர் தத்தையும், ஆந்திர ஆளுநர் பதவிக்கு ஈ.எஸ்.எல்.நரசிம்மனையும் நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கே.சங்கரநாராயணன் மகாராஷ்டிர ஆளுநராக மாற்றப்படுவதால், ஜார்க்கண்டின் புதிய ஆளுநராக மூத்த காங்கிரஸ் தலைவர் மோசினா கிட்வாய் நியமிக்கப்படுகிறார்.
இமாச்சலப் பிரதேச ஆளுநர் பிரபா ராவ் ராஜஸ்தான் மாநில பொறுப்புக்கு மாற்றப்படுவதால், குஜராத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரான ஊர்மிளாபென் பட்டேல் இமாச்சல ஆளுநராகிறார்.
புதிய ஆளுநர்களின் பெயர்கள் நேற்று காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் சந்திப்பின் போது இறுதி செய்யப்பட்டது.
இந்த பட்டியல் தற்போது உள்துறை அமைச்சகத்தின் மூலம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
எம்.கே.நாராயணனால் காலியாகும் பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்புக்கு முன்னாள் வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
முன்னாள் இன்டெலிஜென்ஸ் பீரோ (ஐ.பி) தலைவரான நாராயணன், காங்கிரசுக்கு மிக நெருக்கமானவர் என்பதால் அவர் கடந்த 7 ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார்.
பிரதமர், உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம், உளவுப் பிரிவுகள் ஆகியோரை ஒருங்கிணைக்கும் மிக முக்கியமான பதவி இது.
தீவிரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியது, இலங்கை விவகாரத்தை கையாண்ட முறை என முக்கிய விவகாரங்களில் நாராயணனின் செயல்பாடுகள் சர்ச்சைக்குரியவையாகவே உள்ளன.
மேலும் டெல்லி அதிகார மையத்தில் மலையாளிகளை 'திணித்து' மத்திய அரசை இயக்குவதே கேரளா தான் என்ற பிரமையையும் ஏற்படுத்தியதிலும் நாராயணனுக்கு முக்கிய பங்கு உண்டு.
இந்நிலையில் அவரை மேற்கு வங்க ஆளுநராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications