பழம்பெரும் கம்யூ. தலைவர் ஜோதிபாசு மரணம்

அவருக்கு வயது 95. ஜனவரி 1ம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஏ.எம்.ஆர்.ஐ. மருத்துவமனையில் நிமோனியா காரணமாக அனுமதிக்கப்பட்டார் ஜோதிபாசு. அங்கு தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சில நாட்களுக்கு முன்பு அவரது இதயம், சிறுநீரகம், நுரையீரல் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. முதலில் சிறுநீரகம் செயலிழந்தது. பின்னர் நுரையீரல், இதயம் ஆகியவற்றின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன.
நேற்று இரவு அவரது உடல் நிலை மேலும் மோசமடைந்தது. அவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் ஜோதிபாசு மரணமடைந்தார். இதுகுறித்து இடதுசாரி கூட்டணி கமிட்டியின் தலைவர் பிமன் போஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜோதிபாசு நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற சோகச் செய்தியை உங்களிடம் பெருத்த வருத்தத்துடன், கனத்த இதயத்துடன் கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
ஜோதிபாசுவின் தனி மருத்துவர் டாக்டர் அஜீத் குமார் மைத்தி கூறுகையில், 11.47 மணிக்கு ஜோதிபாசு மரணமடைந்தார் என்றார்.
ஜோதிபாசுவுக்கு சந்தன் என்ற மகன் உள்ளார். அவருடைய மனைவி கமலா நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மரணமடைந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக தொடர்ந்து 23 ஆண்டுகள் இருந்து பெரும் சாதனை படைத்தவர் ஜோதிபாசு என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை உடல் தகனம்
மறைந்த ஜோதிபாசுவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது. நாளை முதல் மக்கள் மற்றும் கட்சியினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம்.
செவ்வாய்க்கிழமை இறுதிச் சடங்குகள் நடைபெற்று உடல் தகனம் நடைபெறும்.
தலைவர்கள் விரைகிறார்கள்...
பாசுவின் மரணச் செய்தி கேட்டதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கொல்கத்தாவுக்கு விரைந்து கொண்டுள்ளனர். சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அவரது மனைவியும், சிபிஎம் எம்.பியுமான பிருந்தா காரத் கொல்கத்தா வந்துள்ளனர்.
பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் பாசுவு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கண்கள் தானம்..
இதற்கிடையே, ஜோதிபாசுவின் கடைசி விருப்பப்படி அவரது கண்கள் தானமாக எடுக்கப்பட்டுள்ளன.
பாசுவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மேற்கு வங்க மாநில அரசு நாளை ஒரு நாள் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.
உடல் எடுத்துச் செல்லப்பட்டது
ஜோதிபாசுவின் மறைவால் மேற்கு வங்க மாநிலமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை முன்பு ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்து விட்டனர். இதனால் மருத்துவமனையின் இயல்பு நிலை ஸ்தம்பித்துப் போய் விட்டது.
இதையடுத்து அவரதை உடலை அங்கிருந்து எடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி மாலை 3 மணிக்கு மேல் ஜோதிபாசுவின் உடல், மருத்துவமனையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டது. முதலில் மகன் சந்தன்பாசுவின் வீட்டுக்கும், பின்னர் ஜோதிபாசுவின் வீட்டுக்கும் உடல் கொண்டு செல்லப்படும். அதன் பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெறும் பீஸ் ஹெவன் என்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்படவுள்ளது.
ஜோதிபாசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி போர்த்தப்பட்டிருந்தது
ஜோதி பாசுவின் உடல் எடுத்துச் செல்லப்படும் வாகனம் தனது பயணத்தைக் கிளம்பியதும் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் ஜோதிபாசு அமரராகி விட்டார் என்ற கோஷங்களை முழங்கினர். ஆயிரக்கணக்கான மக்கள் சூழ்ந்து நின்றதால் வாகனம் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. போலீஸார் பெரும் சிரமத்திற்கிடையே வாகனம் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications