வேலூர் மசூதி விவகாரம்: திருமாவளவனுக்கு பாஜக கண்டனம்
சென்னை: அனைத்து மதத்தினரும் இணைந்து போராடிய, நம் சுதந்திரப் போராட்டத்தின் சின்னமாக மதிக்கப்படும் வேலூர் கோட்டையை மதரீதியாக சித்தரிப்பதை திருமாவளவன் நிறுத்த வேண்டும் என்று பாஜக தமிழக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் கோட்டைக்குள் தொழுகை நடத்துவதற்காக நுழைவுப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் செயல் கடும் கண்டனத்துக்குரியது.
அவர் சொல்லும் இடத்தில் சுதந்திரத்துக்குப் பின் தொழுகையே நடக்கவில்லை. ஆனாலும் கோட்டைக்குள் உள்ள தெற்கு காவல் நிலையத்துக்கு எதிரே ஒதுக்கப்பட்டுள்ள தனி இடத்தில் இப்போது தொழுகை நடந்து வருகிறது.
இந்த உண்மையை மறைத்து கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் அவர் செயல்படுகிறார். இப்போது இவர்கள் தொழுகை நடத்த வேண்டும் என்று கேட்கும் இடம் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது.
ஏற்கெனவே கோட்டைக்குள் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அவரவர்களுக்கு உரிய இடத்தில் வழிபாடு நடத்தி வருகிறார்கள்.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் தோற்றுப்போன திருமாவளவன் தமிழகம் முழுவதும் மதவேற்றுமையைத் தூண்டிவிட்டு அதில் குளிர்காய நினைக்கிறார்.
அனைத்து மதத்தினரும் இணைந்து போராடிய, நம் சுதந்திரப் போராட்டத்தின் சின்னமாக மதிக்கப்படும் வேலூர் கோட்டையை மத ரீதியாக சித்தரிப்பதை திருமாவளவன் நிறுத்தவேண்டும்' என்று கூறியுள்ளார்.
இந் நிலையில் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இதில் முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், ராதாகிருஷ்ணன், கே.என்.லட்சுமணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications