பி.டி கத்தரி-மக்களிடம் கருத்து கேளுங்கள்: வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மரபணு மாற்று உணவுப் பயிர்களை இந்தியாவில் அனுமதிக்கலாமா, வேண்டாமா என பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டத்தை மத்திய அரசு நடத்துகிறது.
ஆனால், தமிழக விவசாய அமைச்சர் மக்களிடம் கருத்துகளைக் கேட்காமல், மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதிப்பதற்கு ஆதரவாகப் பேசுகிறார். ஒரு கருத்துத் திணிப்பைத் தமிழக அரசு நடத்துகிறது.
தமிழக அரசும், தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகமும், மரபணு மாற்று விதைகள் விரைவாகப் பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்று தொடர்ந்து கருத்துக்களை வெளியிடுகிறார்கள்.
இது குறித்து மத்திய அரசு தமிழகத்தில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தாத நிலையில், அப்படி ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் வற்புறுத்தாதது ஏன்?. மரபு அணு மாற்று விதை கூடாது என்ற ஆராய்ச்சியாளர்களின் நிலைப்பாட்டை, தமிழக விவசாயிகளைப் பாதுகாக்கும் கருத்தைப்பதிவு செய்யக் கூடாது என்று முதல்வர் கருதுவது தான் இதற்குக் காரணம் ஆகும். இதைப்பற்றி எந்தக் கண்டனமும் தெரிவிக்கவில்லை.
பி.டி கத்திரிக்காயை உண்பதால், சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை முழுமையாக ஆராயாமல், சில குறைந்த கால ஆய்வுகளின் அடிப்படையில் அனுமதிப்பது தவறு.
மரபணு பருத்தி விதைகளைப் பயன்படுத்தியதால் மராட்டிய மாநிலத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஆடு, மாடுகள் செத்துப்போயின. பருத்திப் பயிர் தொழிலுக்கே பெரிய நஷ்டம் ஏற்படடது.
இந் நிலையில், மரபணு மாற்று கத்திரிக்காயை விளைவித்தால், அது குணப்படுத்த இயலாத உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என்பதை, இத்துறையின் ஆராய்ச்சியாளர்களே தெரிவித்துள்ளனர்.
எனவே, இந்த மிக முக்கியமான பிரச்சனை குறித்து, தமிழக மக்களின் கருத்துக்களை பதிவு செய்கின்ற வகையில், தமிழகத்திலும் கருத்துக் கேட்புக் கூட்டத்தை மத்திய அரசு நடத்த வேண்டும்.
இல்லையெனில் தமிழக அரசே அனைத்து மாவட்டங்களிலும் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தி, தமிழக மக்களின் எண்ணங்களை மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.
மிகவும் முக்கியமான இப்பிரச்சனையில் மத்திய- மாநில அரசுகள் ஏன் இத்தனை அவசரப்படுகின்றன என்பது புரியாத புதிராக இருக்கிறது.
இந்த விஷயத்தில் அனைத்து மக்களின் கருத்துக்களையும் அறிந்த பின்பு தான் முடிவெடுக்க வேண்டும். தமிழக அரசும் தன்னுடைய உரிமையை மத்திய அரசிடம் விட்டுக் கொடுக்கக் கூடாது. மக்கள் உணர்வுகளின் அடிப்படையில் தான் எந்த முடிவையும் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.
மத்திய அரசு தூங்கிக்கொண்டிருந்ததா?:
இதற்கிடையே நெல்லை மாவட்டம் திசையன்விளைக்கு வந்த வைகோ நிருபர்களிடம் பேசுகையி்ல்,
இந்தியாவில் 44 நிகர்நிலை பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உள் கட்டமைப்பு எதுவும் இல்லாத இந்த கல்வி நிறுவனங்களுக்கு எந்த அடிப்படையில் நிகர்நிலை பல்கலைக்கழகம் என்ற தகுதியை மத்திய அரசு கொடுத்தது?. மாணவர்கள் வாழ்க்கை என்ன விளையாட்டுப் பொருளா?.
ஏழை, எளிய மாணவர்கள் கடன் வாங்கி, சொத்துகளை விற்று பணம் செலுத்தி நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர். எனவே இப்படிப்பட்ட பல்கலைக்கழகங்களை முதலில் அங்கீகரித்தது அரசாங்கத்தின் முதல் தவறு.
மத்திய அரசு இவ்வளவு காலம் தூங்கிக் கொண்டிருந்ததா, காலம் கடந்த நடவடிக்கை இது என்றார்.












Click it and Unblock the Notifications