அமர்சிங்குக்கு ஏதாவது நேர்ந்தால் சமாஜ்வாடிதான் பொறுப்பு - ஜெயப்பிரதா
டெல்லி: அமர்சிங்கின் தோழியும், தீவிர ஆதரவாளருமான ஜெயப்பிரதா, அமர்சிங் நீக்கம் தொடர்பாக கட்சிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவருக்கு ஏதாவது நேர்ந்தால், அவரது எதிர்ப்பாளர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
அமர்சிங்கின் நெருங்கிய தோழியும், சமாஜ்வாடிக் கட்சியின் ராம்பூர் தொகுதி எம்.பியுமான ஜெயப்பிரதா, அமர்சிங்கின் நிழல் போல கூடவே இருப்பவர்.
அமர் சிங் விலகலைத் தொடர்ந்து அவர் கருத்துக் கூறாமல் இருந்து வந்தார். இந்த நிலையி்ல் நேற்று அவர் வாய் திறந்தார்.
அமர்சிங் எதிர்ப்பாளர்களை அவர் கடுமையாக சாடினார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெய்பிரதா,
அவருக்கு (அமர்சிங்) ஏதாவது நேர்ந்தால், அவரை யாரெல்லாம் எதிர்த்தார்களோ, குறி வைத்தார்களோ அவர்களே பொறுப்பாவார்கள்.
நான் கட்சியை விட்டு விலகும் முடிவில் இப்போது இல்லை. அந்த எண்ணமும் எனக்கு இப்போதைக்கு இல்லை.
அமர்சிங்கை வெட்கம் கெட்டவர், பைத்தியக்காரர் என்றெல்லாம் விமர்சித்த மோகன் சிங்கை பொதுச் செயலாளராக்கியுள்ளார் முலாயம் சிங் யாதவ். எனவே மோகன் சிங்கின் நடவடிக்கைகளை அவர் கண்காணித்து வர வேண்டும்.
அமர்சிங்கும், நானும் சேர்ந்து லோக் மஞ்ச் என்ற மக்கள் இயக்கத்தை நடத்தி வருகிறோம். அந்தப் பணி தொடரும். அது அரசியல் சார்பற்ற, மக்கள் சேவைப் பணியாகும். எனவே அதில் நாங்கள் இணைந்து செயல்படுவதை யாரும் தடுக்க முடியாது.
அதேபோல உ.பி மாநிலத்தைப் பிரித்து பூர்வாஞ்சல் மாநிலம் அமைக்க வேண்டும் என்ற அமர்சிங்கின் கோரிக்கையையும் நான் ஆதரிக்கிறேன் என்றார் ஜெயப்பிரதா.












Click it and Unblock the Notifications