சர்க்கரை சாப்பிடாமல் யாரும் செத்துவிட மாட்டார்கள்: பவார் கட்சியின் பலே அறிவுரை!

பவாரின் நிர்வாகத் திறமையின்மையே விலைவாசி கடுமையாக உயர்ந்திருப்பதற்குக் காரணம் என்று காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும் வறுத்தெடுத்து வருகின்றன.
இந்த நிலையில் சர்க்கரையை சாப்பிடாவிட்டால் செத்தா போய் விடுவார்கள் என்று திமிர் பிடித்த மாதிரியான கட்டுரையை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒராண்டுக்கு முன்பு கிலோவுக்கு ரூ.22 என விற்கப்பட்ட சர்க்கரை தற்போது, கிலோவுக்கு ரூ.43 முதல் ரூ.50 வரை விற்கப்படுகிறது.
இதன் விளைவு, டீக்கடை முதல் மாத சம்பளக்காரர்களின் பட்ஜெட் வரை எதிரொலிக்கிறது.
விலை அதிகரித்த மற்ற அத்தியாவசிப் பொருட்களை ஒப்பிடுகையில் சர்க்கரையின் விலையேற்றம் மிக அதிகளவில் இருப்பதற்கு, அரசின் தவறான கொள்கைகளே என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரசின் அதிகாரப்பூர்வ இதழான 'ராஷ்டிரவாதி'யில், சர்க்கரை சாப்பிடா விட்டாமல் யாரும் இறந்து போக மாட்டார்கள் என்றும், மக்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களின் உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை கூறி தலையங்கம் வெளியிடப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரசின் மாநில தலைவரும், இதழின் நிர்வாக ஆசிரியருமான மதுக்கர் பிச்சட் தனது தலையங்கத்தில் மேலும் குறிப்பிடுகையில்,
'சர்க்கரை மற்றும் உப்பு அதிகம் சாப்பிடுவது விஷத்துக்கு சமமானது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சர்க்கரை சாப்பிடாமல் உலகத்தில் யாரும் இறந்து போவதில்லை. அதற்கு மாறாக, சர்க்கரையில் தயாரிக்கப்பட்ட பண்டங்களை சாப்பிட்டு நீரிழிவு நோய் தான் அதிகரிக்கிறது.
அதனால், எல்லோரும் சர்க்கரை சாப்பிட வேண்டிய அவசியமும் இல்லை. சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவர்கள் சர்க்கரை எடுத்துக்கொள்ளாமல் தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உயிர் வாழவில்லையா?
மக்கள் பொருளாதார சூழ்நிலை, மற்ற விவகாரங்களையும் மனதில் கொண்டு அதற்கேற்ப தங்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டும்.
சர்க்கரை விலை ரூ.10 முதல்15 வரை உயர்ந்துவிட்டதாக வைத்துக்கொள்வோம். இதன்மூலம் நான்கு பேர் கொண்ட குடும்பத்தில் இதற்கான செலவினம் ரூ.60 முதல் 90 வரை அதிகரிக்கலாம்.
அதேசமயத்தில் ஆறாவது ஊதியக் குழு பரிந்துரைப் படி சம்பள விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க வேண்டும். தொழிலாளர்களின் குறைந்தபட்ச கூலி கூட அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆக, முடிவாக நாம் சொல்ல வருவது என்னவெனில், சர்க்கரை விலை உயர்வால் குடும்பங்களின் பட்ஜெட்டில் எந்த பாதிப்பும் இல்லை.
பொதுவாக நாட்டில் அழகு சாதனப் பொருட்கள், வாகனங்கள், பெட்ரோல், டீசல், சினிமா கட்டணம் என பலவற்றின் விலைவாசியும் அதிகரித்துத் தான் உள்ளன.
ஆனால் அதுகுறித்தெல்லாம் யாரும் பேச மறுக்கின்றனர். சர்க்கரை விலை உயர்ந்துவிட்டதை மட்டும் பெரிதுபடுத்துகிறார்கள்' என கூறப்பட்டுள்ளது.
இந்த தலையங்கத்தைப் பார்த்தால், இனிமேல் யாரும் சர்க்கரை, உப்பு சாப்பிடக் கூடாது என்று சட்டம் போட வேண்டும் என்று பவார் கூறினாலும் கூறலாம் என்று தெரிகிறது.
மக்களின் தவிப்புக்கு நிவாரணம் தர முடியாவிட்டாலும் கூட அவர்கள் மனம் நோகும்படியாக இப்படிப் பேசுவது ஒரு பொறுப்பான அரசியல் கட்சிக்கு அழகா?












Click it and Unblock the Notifications