ஏப். மாதம் 2 செயற்கைக் கோள்கள் ஏவப்படும்- இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன்
குளச்சல் வருகிற ஏப்ரல் மாதம் 2 செயற்கைக் கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குமரி மாவட்டம் முட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), சென்னை சத்திய பாமா பல்கலைக்கழகம், கிராமப்புற ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து நடமாடும் தொலை தொடர்பு மருத்துவ சேவை திட்டத்தை செயல்படுத்துகிறது.
இத்திட்டத்திற்கான பஸ் நேற்று இயக்கப்பட்டது. விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் வீரராகவன், இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன், சத்தியபாமா பல்கலை கழக துணைவேந்தர் ஜேப்பியார் ஆகியோர் பேசினார்.
பின்னர் நிருபர்களிடம் இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,
தொலை கல்வி-மருத்துவத்திற்கு கார்ட்டோ சாட்டிலைட் 2பி என்ற செயற்கைகோள் தயாரிக்கப்பட்டு வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இது விண்ணில் செலுததப்படும்.
அதேபோல, தகவல் தொடர்பு பரிமாற்றத்திற்கான ஜி-சாட் 4 செயற்கை கோள் பெங்களூரில் உள்ள செயற்கை கோள் மையத்தில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இது ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏப்ரலில் விண்ணில் செலுத்தப்படும்.
சத்தியபாமா பல்கலை மாணவர்களும், இஸ்ரோவும் இணைந்து உருவாக்கும் நேனோ செயற்கை கோள் பணி முடிந்து விட்டது. வரும் ஜூன், ஜூலை மாதத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இந்த நடமாடும் பஸ்ஸுடன், தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த 67 பெரிய மருத்துவமனைகள் இணைக்கப்பட்டுள்ளன.
சத்தியபாமா பல்கலைக் கழகம் சார்பில் ஒரு டாக்டர் மற்றும் இரண்டு நர்சுகளும், இஸ்ரோ சார்பில் இரண்டு டெக்னீஷியன்களும் இதில் இடம் பெறுவர்.
இந்த வேன், கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications