கடத்தப்பட்டு வந்த துப்பாக்கி உதிரி பாகங்கள்- எடுக்க வந்தவர் கைது
சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட துப்பாக்கி உதிரி பாகங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த பார்சலை எடுக்க வந்த நபரை கைது செய்து மத்திய உளவுத்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள சரக்கு பிரிவுக்கு வெளிநாடுகளில் இருந்து வந்திருந்த சரக்கு பார்சல்களை வழக்கம் போல் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை போட்டனர்.
அப்போது துபாயில் இருந்து வந்த ஒரு பார்சல் மட்டும் சந்தேகப் படும்படியாக இருந்தது. அந்த பார்சலை ஸ்கேன் செய்து பார்த்தபோது, உலோக பொருட்கள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, பார்சலை பிரித்து சோதனையி்ட்டனர். அதில், துப்பாக்கியில் பொருத்தி நீண்ட தூரம் பார்க்கும் தொலைநோக்கிகள், சுடும் போது சத்தம் வராமல் இருக்கும் சைலன்சர்கள் உள்பட துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்கள் இருந்தன.
எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று விசாரித்தபோது அதில் போலியான முகவரி தரப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மத்திய உளவுப் பிரிவினருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து பார்சலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் இந்தப் பார்சலை பெற்றுக் கொள்வதற்காக மண்ணடியைச் சேர்ந்த யூசுப் என்பவர் வந்தார். அவரை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்து உளவுத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையின்போது, சீர்காழியை சேர்ந்த விஜயன் என்பவர்தான் இந்தப் பார்சலை எடுத்து வர சொன்னதாக தெரிவித்தார்.
இதையடுத்து உளவுத்துறை அதிகாரிகள் குழு சீர்காழி விரைந்தது. ஆனால் அங்கு விஜயன் இல்லை. உ.பிக்குப் போயிருப்பதாக தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து தற்போது யூசுப்பை போலீஸார் கைது செய்துள்ளனர். விஜயனையும் பிடிக்க முயற்சிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
விஜயனின் பின்னணி குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தீவிரவாத தொடர்புகள் இருக்கிறதா என்றும் அதிகாரிகள் விசாரணை மேற்கொகண்டு வருகின்றனர். கள்ளத் துப்பாக்கியை விற்பனை செய்யும் நபரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications