பெங்களூர் 7 மாடிக் கட்டட தீவிபத்தில் 9 பேர் பலி
பெங்களூர், பழைய விமான நிலையச் சாலை, இந்திராநகர் மேம்பாலம் அருகே 7 மாடிகளைக் கொண்ட அடுக்கு மாடிக் கட்டடம் உள்ளது. இங்கு ஹோட்டல், வணிக நிறுவனங்கள், கம்ப்யூட்டர் நிறுவனங்கள், பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.
இங்கு நேற்று மாலை நாலரை மணியளவில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக லிப்ட்டின் கேபிள் எரிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டது.
தீப்பிடித்து குபுகுபுவென புகை வரத் தொடங்கியதால் பீதி அடைந்தவர்கள் விரைவாக வெளியேறத் தொடங்கினர்.
கட்டடத்தின் முதல் இரு தளங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். ஆனால் 3வது தளத்திற்குத் தீ பரவியதால் அவர்களை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேபோல மேலே உள்ள தளங்களிலும் ஏராளமானவர்கள் மாட்டிக் கொண்டனர்.
அவர்கள் ஜன்னல்களுக்கு அருகே நி்ன்று உதவி கோரி குரல் எழுப்பினர். இந்த நிலையில் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து கயிறுகளைத் தொங்க விட்டு அதன் வழியாக சிலரை மீட்டனர்.
இந்த நிலையில் சிலர் உயிர் தப்புதவற்காக மாடிகளிலிருந்து குதித்தனர். அதில் ஒரு ஆணும், இரண்டு பெண்களும் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் ஒரு பெண் தனது சேலையை கயிறு போல மாற்றி அதைக் கட்டி குதிக்க முயன்று சேலை அறுந்ததில் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தார்.
தீவிபத்தில் மூச்சுத் திணறியும், மேலேயிருந்து கீழே குதித்ததாலும் மொத்தம் 9 பேர் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 3 பேர் பெண்கள் ஆவர். இறந்தவர்கள் - ராஜேஷ் சுப்ரமணியம், சுனில் ஐயர், சவீதா, பென்சி குமார், சுரபி ஜோஷி, புரோகித் மதன் சிங், சித்தார்த், பயாஸ் பாஷா, அனில் உதய் என்று தெரிய வந்துள்ளது.
கட்டடத்திற்குள் சிக்கியிருந்த கிட்டத்தட்ட 150 பேரை தீயணைப்புப் படையினர் பத்திரமாக மீட்டு வந்தனர். 80 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். அவர்களில் 59 பேரை மணிப்பால் மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில் 30 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து மாநில உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா அதிர்ச்சியும், வேதனையும் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த கட்டடத்தைப் பார்வையிட்ட அவர் மருத்துவமனைக்கு சென்று அங்கு காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.













Click it and Unblock the Notifications