தமிழகத்திற்குப் புதிய ரயில்கள், திட்டங்கள் - மமதாவுக்கு கருணாநிதி நன்றி
சென்னை: பயணிகள் கட்டணங்களையும், சரக்கு கட்டணங்களையும் உயர்த்தாமல் ரயில்வே பட்ஜெட்டை அளித்துள்ள, தமிழகத்திற்கு பல திட்டங்களையும், புதிய ரயில்களையும் அறிவித்துள்ள மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜிக்கு எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
புதிய ரயில் பாதைகள் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை வெறும் வணிக கண்ணோட்டத்தோடு மட்டுமே நோக்காது, ஒரு சமூக பார்வையோடு கருதவேண்டும் என்ற கொள்கை கோட்பாட்டை சென்ற ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்த மம்தா பானர்ஜி, வரும் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டிலும் இக்கோட்பாட்டை மீண்டும் வலியுறுத்தி உறுதிப்படுத்தி நாடு முழுவதும் புதிய ரயில்வே பாதைகளையும், ஏற்கனவே இருக்கின்ற ரயில் பாதைகளுக்கு இரண்டாவது பாதை அமைக்கவும் அறிவித்து இருப்பதை நான் மிகவும் பாராட்டுகின்றேன்.
குறிப்பாக, தமிழகத்தைப் பொறுத்தவரையில், மதுரை-கோட்டயம், மதுரை-தூத்துக்குடி, திண்டுக்கல்-குமுளி, ராமேஸ்வரம்-தனுஷ்கோடி போன்ற புதிய ரயில் தடங்களை அறிவித்ததற்கு தமிழக அரசின் சார்பில் எனது பாராட்டுதல்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி-சாம்ராஜநகர் ரயில் பாதைக்கு ஆய்வுப்பணி மேற்கொள்ளப்படும் என்றும், நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி ரயில் பாதை 2009-2010-ம் ஆண்டிலேயே முடிக்கப்படும் என்றும், சேலம்-நாமக்கல் ரயில் பாதை பணிகள் 2010-2011-ம் ஆண்டில் முடிக்கப்படும் என்றும், கடலூர்-சீர்காழி, வேலூர்-விழுப்புரம், போத்தனூர்-கோவை ஆகிய ரயில் பாதை அகலப்படுத்தப்படும் பணிகள் 2009-2010 ஆண்டில் முடிக்கப்படும் என்றும், மயிலாடுதுறை-திருவாரூர், திண்டுக்கல்-பழனி ஆகிய ரயில்பாதை அகலப்படுத்தும் பணிகள் 2010-2011-ம் ஆண்டில் முடிக்கப்படும் என்றும், நீடாமங்கலம்-மன்னார்குடி ரயில் பாதைப்பணி மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது.
சென்னை துரித ரயில்பாதை திட்டத்தின்கீழ், வேளச்சேரியிலிருந்து புனித தோமையர் மலை வரை விரிவுபடுத்தும் திட்டம் 2012 மார்ச் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று அறிவித்திருப்பதும் மகிழ்ச்சியை அளிக்கிறது. திருவாரூர் ரயில் நிலையம் தரம் உயர்த்தப்படும் என்பதும், சேலம், திருச்சி கோட்டை மற்றும் திருத்தணி ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படும் என்பதும் உவகை அளிக்கிறது.
சென்னை-சூலூர்பேட்டை, சென்னை-வேளச்சேரி, சென்னை-திருத்தணி, சென்னை-அரக்கோணம் ஆகிய புறவழி தடங்களில் கூடுதல் எண்ணிக்கையில் ரயில் சேவையை அதிகரித்து இருப்பது சென்னை புறநகர் பகுதிகளிலிருந்து சென்னைக்கு தினமும் வந்து பணிபுரிபவர்களுக்கு பயன் உள்ளதாக அமையும் என்று கருதுகிறேன்.
மேலும் தமிழகத்திலிருந்து பல்வேறு இடங்களுக்கு புதிய ரயில் சேவைகளை அறிவித்திருப்பது பாராட்டுதலுக்குரியது. சென்னையில் ரயில்வே துறை மூலம் ஒரு விளையாட்டு பயிற்சி நிலையம் அமைக்கப்படும் என்றும், சென்னை பெரம்பூரிலுள்ள ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை நவீனப்படுத்தப்பட்டு, மேலும் ஒரு அலகு நிறுவப்படும் என்று அறிவித்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பயணிகள் கட்டணங்களையும், சரக்கு கட்டணங்களையும் உயர்த்தாமல் ரயில்வே பட்ஜெட்டை அளித்துள்ள மம்தா பானர்ஜிக்கு எனது பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications