கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து அரசு ஊழியர்கள் மே மாதம் மாநாடு
சென்னை: முதல்வர் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்து அரசு ஊழியர் ஒன்றியம் (என்ஜிஜிஓ) சார்பில் மே மாதம் நன்றி மாநாடு நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத் தலைவர் கோ.சூரியமூர்த்தி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்துக் கூறுகையில்,
சென்னை கோட்டூர்புரத்தில் அமைக்கப்பட்டு வரும் அண்ணா நூற்றாண்டுவிழா நூலகத்திற்கு அரசு ஊழியர்கள் சார்பில் ஒரு லட்சம் புத்தகங்களை நன்கொடையாக வழங்க உள்ளோம்.
தமிழ்நாட்டில் 14 லட்சம் அரசு ஊழியர்கள், 6 லட்சம் ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். முதல்-அமைச்சர் கருணாநிதி அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் ஏராளமான சலுகைகளை வாரி வழங்கி உள்ளார். அதுமட்டுமல்ல கடந்த ஆட்சியின்போது அரசு ஊழியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சலுகைகளையும் திரும்ப அளித்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்து வட்ட, மாவட்ட அளவில் நன்றி தெரிவித்து மாநாடு நடத்தப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாநில அளவிலான மாநாடு சென்னையில் மே மாதம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வர் கருணாநிதியிடம் தேதி கேட்டிருக்கிறோம். அவர் தேதி வழங்கியவுடன் நாள் முடிவு செய்யப்படும்.
அரசு ஊழியர்கள் மாவட்டத்திற்கு ஆயிரம் பேர் வீதம் கண் தானம், ரத்த தானம், உறுப்பு தானம் செய்ய உள்ளார்கள்.
முதல்கட்டமாக விழுப்புரத்தில் 27-ந் தேதி நடைபெறும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க ஊழியர் மாநாட்டில் அந்த ஊழியர்கள் 1200 பேர் தானம் செய்வார்கள். இதற்காக உறுதிமொழி ஆவணங்கள் விழாவின்போது சுகாதாரத்துறை செயலாளர் வி.கே.சுப்புராஜிடம் ஒப்படைக்கப்படும்.
கோவையில் உலக தமிழ் செம்மொழி மாநாடு நடத்த நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் கருணாநிதி. பாராட்டுகிறோம். இந்த மாநாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரளாக கலந்துகொள்வார்கள். இதற்கு வசதியாக மாநாடு நடைபெறும் நாட்களை விடுமுறை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறோம்.
6-வது ஊதியக்குழுவில் ஏற்பட்ட சம்பள முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவிடம் 170 வகையான பிரிவுகளில் உள்ள ஊதிய முரண்பாடுகளை தெரிவித்துள்ளோம். புதிய ஊதியம் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications