சச்சின் சாதனைகளுடன் போட்டி போடும் விலைவாசி உயர்வு - பாஜக
டெல்லி: விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த என்ன வழி என்று இந்த அரசுக்குத் தெரியவில்லை. தீர்வே தெரியாமல் விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறது. தீர்வு காண்பதற்குப் பதில் தனது தோல்வியை மறைக்க காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. சச்சின் சாதனைகள் அதிகரிப்பது போல விலைவாசி உயர்வும் போட்டி போட்டு ஏறிக் கொண்டிருக்கிறது என்று ராஜ்யசபா பாஜக தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் நேற்று விலைவாசி உயர்வு தொடர்பாக குறுகிய கால விவாதம் நடைபெற்றது. அப்போது அருண் ஜேட்லி பேசுகையில், விலைவாசியைக் கட்டுப்படுத்துவது எப்படி என்ற யோசனையே இந்த அரசுக்கு இல்லையா. அல்லது அந்த சிந்தனை வற்றிப் போய் விட்டதா. தோல்வியை மறைக்க காரணத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது இந்த அரசு.
விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாத அரசு, நுகர்வோர் மீது மறைமுக வரியை சுமத்தி வருகிறது என்பதுதான் உண்மை. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகிறது அரசு.
பருப்பு விலைகளுக்கும், சச்சின் டெண்டுல்கருக்கும்தான் இப்போது கடும் போட்டி நிலவுகிறது. சச்சின் கிரிக்கெட்டில் உச்சத்தைத் தொட்டால், பருப்பு விலையும் போட்டி போட்டுக் கொண்டு உச்சத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
இந்த அரசின் மிகப் பெரிய தோல்வியே, உணவுப் பொருட்களின் நிர்வாகத்தை தவறாக கையாண்டதுதான். அரசு விரைவாக செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அப்பாவி பொதுமக்கள் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விடும்.
வறட்சியால்தான் இந்த நிலை என்று அரசு கூறுவதை ஏற்க முடியாது. இதேபோன்ற நிலை பாஜக கூட்டணி ஆட்சி இருந்தபோது 2002ம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது உற்பத்திப் பற்றாக்குறை 40 மில்லியன் டன்களாக இருந்தது. ஆனால் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை சப்ளை செய்து விலைவாசி உயர்வை கட்டுக்குள் வைத்திருந்தோம்.
ஆனால் இப்போது பற்றாக்குறை அளவு வெறும் 18 மில்லியன் டன்கள்தான். போதுமான இருப்பு உள்ளதாக அரசு தொடர்ந்து வருகிறது. அப்படியானால் அவை ஏன் சந்தைக்கு வரவில்லை.?
விலை வாசி உயர்வுக்கு மாநில அரசுகளை குற்றம் சாட்டுகிறது மத்திய அரசு. அத்தியாவசியப் பொருட்களை பதுக்குவோரைக் கண்டுபிடிக்க மத்திய அரசு நடத்தும் ரெய்டுகள் பெரும்பாலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி நடைபெறாத மாநிலங்களில்தான் நடைபெறுகின்றன.
கிட்டத்தட்ட 83 சதவீத அளவிலான ரெய்டுகள், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆளாத மாநிலங்களில் நடைபெற்றுள்ளன. 17 சதவீத ரெய்டுதான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆளும் மாநிலங்களில் நடந்துள்ளது என்றார் ஜேட்லி.
ஜேட்லி கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பேசினார். அவரது பேச்சு முழுவதையும் பிரதமர் மன்மோகன் சிங் அமைதியாக கேட்டபடி இருந்தார். ஜேட்லி பேசி முடித்ததும் மன்மோகன் சிங் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.












Click it and Unblock the Notifications