கேரளா பந்த்-தமிழக பேருந்துகள் எல்லையில் நிறுத்தம்
திருவனந்தபுரம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் இடதுசாரி ஆதரவு தொழிற்சங்கள் அழைப்பு விடுத்த முழு அடைப்பு காரணமாக மாநிலமே முடங்கிப் போயுள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளா முழுவதுமே பேருந்துகள், டாக்ஸிகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழக, கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த பந்தையொட்டி தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி, வேன்களும் இயக்கப்படவி்ல்லை. அவையும் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நாகர்கோவில பாறசாலை, நெல்லை புளியரை வழியாக கேரளாவுக்கு எந்த வாகனமும் செல்லவும் இல்லை, வரவுமில்லை. மேலும் அத்திவாசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களும் அதில் கலந்து கொண்டதால் குமரி மாவட்டம், நெல்லை மாவட்ட எல்லையோர கேரள மாநில மக்கள் அத்திவாசிய பொருட்கள் கிடைக்காமலும், போக்குவரத்து வசதியின்றியும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் புளியரை, பாறசாலை, பகுதிகளில் ஏராளமான சரக்கு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கேரள மாநிலம் செல்லும் பயணிகள் ரயில் கார் மூலம் சென்றதால் ரயில்களில் கூட்டம் அலை மோதியது.
கேரள மாநில தேயிலை, ரப்பர் தோட்டங்களில் பணிபுரியும் தமிழக தொழிலாளர்கள் பெரும் பாதிப்பு அடைந்தனர். இந்த பந்த் காரணமாக நாகர்கோவில், சுரண்டை, செங்கோட்டை மார்க்கெட்டுகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
அமைச்சர் காரை முற்றுகையிட்டு பேராட்டம்:
இந் நிலையில் கேரள அமைச்சர் பி.கே. ஸ்ரீமதியின் பாதுகாப்புக்கு வந்த வாகனம் மோதி ஆட்டோவில் சென்ற பெண்கள் படுகாயமடைந்ததை அடுத்து அமைச்சரின் காரை முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் பி.கே. ஸ்ரீமதி , கண்ணூர் அருகே உள்ள மாட்டூல் அரசு மருத்துவமனையில், புதிய கட்டடத் திறப்பு விழாவுக்கு காரில் சென்றார். அமைச்சருக்கு பாதுகாப்பாக போலீசார் வாகனமும் உடன் சென்றது.
சர்ச் சாலையில், போலீசார் வாகனம் அந்த வழியே சென்ற ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோ தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த மூன்று பெண்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஆட்டோ டிரைவரும் படுகாயம் அடைந்தார்.
படுகாயம் அடைந்தவர்களை போலீஸ் வாகனத்திலேயே, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்ல போலீசார் மறுத்து விடவே, பொதுமக்கள் ஆவேசம் அடைந்து, அந்த வழியே வந்த அமைச்சர் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இதனால், அரசு மருத்துவமனை புதிய கட்டடத் திறப்பு விழாவில் அமைச்சர் பி.கே. ஸ்ரீமதி பங்கேற்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications