பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை திரும்பப் பெற முடியாது - பிரதமர்
டெல்லி: பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரி உயர்வை திரும்பப் பெற முடியாது. சலுகைகளைத் தொடர்ந்து கொண்டிருந்தால் அது நமது முதலீட்டுச் சூழலை அழி்த்து விடும். முதலீட்டுச் சூழல் பாதிக்கப்பட்டால், புதிய வேலைவாய்ப்புகளை நம்மால் உருவாக்க முடியாமல் போய் விடும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
3 நாள் செளதி அரேபியப் பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று இரவு நாடு திரும்பினார் பிரதமர் மன்மோகன் சிங். வரும் வழியில் ஏர் இந்தியா ஒன் விமானத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்..
சலுகைத் திட்டங்களை நீண்ட காலத்திற்குத் தொடர முடியாது. அவை தொடர்ந்தால் அது நாட்டுக்கு நல்லதல்ல. சலுகைகளைத் தொடர்ந்து வந்தால் அது நாட்டின் முதலீட்டுச் சூழலை அழித்து விடும். அப்படி நடந்தால் நம்மால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் போய் விடும். அத்தகைய சூழ்நிலை பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் முட்டுக்கட்டையாகி விடும்.
எந்த விலை உயர்வுமே நிச்சயம் சிலரைப் பாதிக்கத்தான் செய்யும். ஆனால் நாம் நீண்ட கால பலன்களை அடிப்படையாகக் கொண்டுதான் எதையும் பார்க்க வேண்டும். சலுகைத் திட்டங்களை உடன் வைத்துக் கொண்டு நாம் பண வீக்கத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க முடியாது.
இப்போதோ அல்லது பின்னாளோ அவை போகத்தான் வேண்டும். அதற்கு விடை கொடுத்தால்தான் நாம் வளர்ச்சிப் பாதையில் நடை போட முடியும். இவற்றை எல்லாம் பாலன்ஸ் பண்ணித்தான் நாம் செல்ல வேண்டும்.
தற்போதைய விலை உயர்வால், ஒட்டுமொத்த விலைப் புள்ளியில் பெருமளவில் மாற்றம் வ்நது விடாது. அதன் பாதிப்பு 0.4 சதவீதத்திற்கு மேல் நிச்சயம் போகாது. விரைவில் ரபி பருவப் பயிர்கள் சந்தைக்கு வரவுள்ளன. எனவே விலைவாசி நிச்சயம் குறையத் தொடங்கும்.
கோதுமை, சர்க்கரை, எண்ணை வித்துக்கள், பருப்பு
வகைகளின் விலையில் சற்றும் மாற்றம் ஏற்படும் என்றார் மன்மோகன் சிங்.
பட்ஜெட்டைப் புறக்கணித்து பாஜக உள்ளிட்ட கட்சிகள் வெளிநடப்பு செய்தது குறித்த கேள்விக்குப் பிரதமர் பதிலளிக்கையில், அவர்கள் செய்த வெளிநடப்பு தவறானது என்றார் சிங்.
பெட்ரோல் விலை-இன்று பிரதமர் அவசர ஆலோசனை:
இந் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கூட்டணி கட்சிகள் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நாடு தழுவிய அளவில் போராட்டங்களும் தீவிரமடைந்து வருவதால் பிரதமர் மன்மோகன் சிங் இன்று அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.












Click it and Unblock the Notifications