மாற்றுத் திறன் படைத்தோர் உரிமையை நிலை நாட்டுவோம்: கருணாநிதி
சென்னை: மாற்றுத் திறன் படைத்தோர் கோரும் உரிமைகள் நிலை நாட்டப்பட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மாற்றுத் திறன் படைத்தோரின் உரிமைகள் குறித்த சட்டம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ஏற்று, கையெழுத்திட்ட நாடுகளில் ஏழாவது நாடாக இந்தியா இடம் பெற்றுள்ளது.
அந்தச் சட்டத்தின் தொடர்பாக காட்டப்பட்டுள்ள ஊனமுற்றோர் எண்ணிக்கை இந்திய மக்கள் தொகையில் இரண்டு விழுக்காடு எனவும், தமிழகத்தில் அவர்களின் எண்ணிக்கை 18 லட்சம் பேர் என்றும் அறிந்து கொள்ள முடிந்தது.
குறிப்பிட்ட அவயங்களைப் பயன்படுத்த முடியாதவர்கள் என்று அவர்களை ஒதுக்கி விடாமல் அல்லது ஒரு தனிப் பட்டியலில் சேர்த்து விடாமல், இழித்துரைப்பதுபோல் இன்று தோன்றுகிற குருடர், செவிடர், நொண்டி, ஊனம், முடம் என்றெல்லாம் அவர்களை அழைக்கக் கூடாது.
பொதுவாக, ஊனமுற்றோர் என்பதற்குப் பதிலாக ஒரு அவயத்தின் செயல்பாட்டுக் குறையால் அவர்களுடைய மற்றொரு திறன் மேலும் ஒரு பங்கு சிறப்புறுகிறது என்ற அடிப்படையில் ""மாற்றுத் திறனாளிகள்'' என்று அழைக்கும் முறை சில ஆண்டுகளுக்குப் முன்பே அதாவது 2007ம் ஆண்டிலேயே ஐக்கிய நாடுகள் சபையில் விவாதிக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக அந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனுடையோருக்கான ஐக்கிய நாடுகள் சாசனத்தை இந்தியாவில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
மாற்றுத் திறன் உடையோரின் அரசியல் உரிமைகளை நிலைநாட்ட அவர்களுக்கு சட்டப் பேரவை, நாடாளுமன்றத்தில் 3 சதவீத இட ஒதுக்கீடு உடனடியாக வழங்க வேண்டும்.
அனைத்துத் துறைகளிலும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு அளிப்பதுடன் அனைத்துத் துறையின் வளங்களிலும் 3 சதவீதத்தை மாற்றுத் திறன் உடையோரின் வளர்ச்சிக்காக செலவிட வேண்டும்.
மாநிலத்திலும், மத்திய அரசிலும் மாற்றுத் திறன் உடையோருக்கான அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும்.
அரசுப் பள்ளிகள், கல்லூரிகள் குறைந்துவிட்ட நிலையில், தனியார் பள்ளிகளில், கல்லூரிகளில் பயிலும் மாற்றுத் திறன் கொண்ட மாணர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.
வீடு வீடாகச் சென்று மாற்றுத் திறன் உடையோரின் கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தேசிய அடையாள அட்டை முழுமையான ஏற்பு ஆவணமாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 கோரிக்கைகள் உள்ளன.
மாற்றுத் திறன் உடையோருக்கான சமூக, பொருளாதார, அரசியல் உரிமைகளைப் பெறுவதில் அனைத்து மக்களும் தங்களது ஆதரவினை வழங்க வேண்டும். கல்வியாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் இதை முன்னெடுக்க வேண்டும்.
இவைகள் மாற்றுத் திறன் படைத்தோரின் கோரிக்கைகளாக இருக்கின்றன. ஆனால், அவை கோரிக்கைகள் அல்ல, "உரிமையை வலியுறுத்தல்'' என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு உரிய வாய்ப்புகளை அளிப்பதற்கு மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு மாநில அரசின் மூலமாகத் தகுந்த முறையில் மாற்றுத் திறன் உடையோருக்கான துன்பங்களைக் களையலாம். எல்லோரையும் போல அவர்களையும் சமமாக உயர்த்தலாம் என்ற கருத்தை தமிழக அரசின் மூலமாக மத்திய அரசுக்கு எடுத்துச் சொல்லி அவர்களிடம் வேண்டுகோள் வைக்கலாம் எனக் கருதுகிறேன்.
ஐ.நா. மன்றம் இயற்றிய சட்டத்தின்படி, சில முக்கிய சலுகைகள் குறிப்பாக எல்லாவற்றிலும் அவர்களுக்கு முக்கிய சதவீதம் அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதல்கட்டமாக பரிசீலிப்போம்.
அவர்களுக்கு தோராயமாக மனித நேய உணர்வுடன் அரசின் சார்பில் வழங்குகின்ற உதவிகளுக்குப் பதிலாக அவர்கள் கோரும் உரிமையை நிலை நாட்ட குறிப்பிட்ட சதவீத அளவு வாய்ப்புகளை அளிக்க மத்திய அரசுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
மத்திய அரசும் இதற்கு இணங்கி, 2007ம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மத்திய சாசனத்தில் ஏழாவது நாடாக கையெழுத்திட்டதை நினைவில் வைத்துக் கொண்டு ஆவன செய்யும், சாதகமான முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.
ரூ.1.8 கோடியில் செவித்திறனற்றோருக்கான பள்ளி:
இந் நிலையில் தனது சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.85 கோடி செலவில் கட்டப்பட்ட செவித்திறனற்றோருக்கான கூடுதல் பள்ளி கட்டிடத்தை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நாராயணா சாலையில் உள்ள சிறுமலர் பள்ளி வளாகத்தில் இந்த கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், கடந்த 2008ம் ஆண்டு எனது பிறந்தநாளை இங்கு கொண்டாட வந்தபோது, இந்த பள்ளி நிர்வாகம் சார்பில் புதிய கட்டிடம் கட்டி தருமாறு என்னிடம் கோரிக்கை வைத்தார்கள்.
எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை தனியார் பள்ளிகளுக்கு செலவிட முடியாத நிலை உள்ளது. எனவே, அந்த சட்டத்தை தளர்த்தி சிறப்பு அரசு ஆணை வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.1.85 கோடி நிதி கட்டிடம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டது.
அதன் மூலம் கடந்த ஆண்டு எனது பிறந்த நாள் அன்று இந்த பள்ளிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 18 மாதத்தில் இந்த பணியை முடிக்க திட்டமிட்டோம். ஆனால், விரைவாக 12 மாதங்களில் இந்த பணி முடிக்கப்பட்டுள்ளது.
பின்னர் செவித்திறன் மற்றும் பார்வையற்ற குழந்தைகளுடன் மு.க.ஸ்டாலின் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
கேக்' துண்டுகளை அந்தக் குழந்தைகளுக்கு ஸ்டாலினே ஊட்டிவி்ட்டார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ஒவ்வொரு வருடமும் என்னுடைய பிறந்த நாள் அன்று எந்த பணிகள் இருந்தாலும், இங்கு வருகை தந்து இங்கு பயிலக்கூடிய மாணவர்களை சந்திக்கிற வாய்ப்பு கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து கிடைத்து வருகிறது.
இந்த மாணவர்கள் என்னை வாழ்த்தியும், பேசியும் மகிழ்ச்சியுற்றார்கள். இதை பார்க்கும் போது ஆண்டுக்கு ஆண்டு, மாதத்திற்கு மாதம் எனது பிறந்தநாள் வரக்கூடாது என்று நினைக்க தோன்றுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications