நூல் ஆலையில் நள்ளிரவில் தீ: பல லட்சம் மதிப்பு பஞ்சு சாம்பல்
கோபி: நூல் ஆலையில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு எரிந்து சாம்பலாயின.
கோபி அருகே கொளப்பலூரில் தனியார் நூல் மில் உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று மாலை வேலை முடித்து தொழிலாளர்கள் வீடு திரும்பினர். நள்ளிரவு கடந்து 1.30 மணி அளவில் மில்லில் உள்ள பஞ்சு குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது.
அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதியே தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த காவலாளி அலறிஅடித்து வெளியேறினார்.
மில் உரிமையாளருக்கு தகவல் தரப்பட்டது. பின்னர் கோபி தீயணைப்பு நிலைய வண்டிகளுடன் போலீசார் விரைந்து வந்தனர்.
சத்தியமங்கலம், பெருந்துறை தீயணைப்பு நிலையங்களில் இருந்தும் 40 தீயணைப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
விடிய விடிய தீ அணைக்கும் பணி நடந்தது. சுமார் 8 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
மின் கசிவு காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள பஞ்சு மற்றும் இதர பொருட்கள் எரிந்து நாசமாயின.