மத்திய அரசுக்கு மாவோயிஸ்டுகள் புதிய நிபந்தனை
கொல்கத்தா: பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமானால் மத்திய அரசு கைது செய்துள்ள நக்சல் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று மாவோயிஸ்டுக்ள புதிய நிபந்தனை விதித்துள்ளனர்.
பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து மத்திய அரசு வரும் 6ம் தேதிக்குள் எங்களுக்கு உறுதியான தகவலை தெரிவிக்கவேண்டும் என்று மாவோயிஸ்ட் நக்சலைட்டுகள் கெடு விதித்துள்ளனர்.
மேற்கு வங்கம், ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட ஆகிய மாநிலங்களில் மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவது உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.
மாவோயிஸ்டுகள் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தால் மத்திய அரசு அதை ஏற்கத் தயார் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த மாதம் தெரிவித்தார்.
சிதம்பரத்தின் யோசனையை ஏற்பதாகக் கூறிய மாவோயிஸ்டுகள் தங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உட்பட மத்திய அரசுகள் பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர்.
ஆனால், மாவோயிஸ்டுகளின் நிபந்தனை அடிப்படையில் பேச்சுவார்த்தையில் பங்கேற்க மத்திய அரசு தயாராக இல்லை என்று சிதம்பரம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
கடந்த 23ம் தேதி மாவோயிஸ்டுகளுக்கு தெரிவிக்கும் வகையில் ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் ஒரு பேக்ஸ் எண்ணைக் கொடுத்து, நாங்கள் வன்முறையைக் கைவிட்டு விட்டோம் என்ற ஒரு அறிக்கையை எனக்கு அனுப்பி வையுங்கள்.
அதில் எந்தவிதமான நிபந்தனைகளும் இருக்கக் கூடாது. அதை அனுப்பினால் நான் பிரதமருடன் பேசி ஆவண செய்கிறேன் என்று கூறியிருந்தார்.
இதற்கு மாவோயிஸ்டுகள் பதில் அறிக்கை வெளியிட்டபோது, ஒரு ஒரு மொபைல் எண்ணைக் கொடுத்து, இதில் வியாழக்கிழமை சரியாக மாலை 5 மணிக்குத் தொடர்பு கொண்டால் எங்களது செய்தித் தொடர்பாளர் கிஷன்ஜி அதில் கிடைப்பார். அவருடன் நீங்கள் பேசவும் என்று கூறியிருந்தனர்.
மாவோயிஸ்டுகளின் இந்த பதிலுக்கு உள்துறை அமைச்சகம் பதிலளிக்கவில்லை. மாறாக கோல்கத்தாவில் மாவோயிஸ்ட் நக்சல் இயக்கத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், மாவோயிஸ்ட் செய்தித் தொடர்பாளர் கிஷன்ஜி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
'மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து நாங்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தோம். போர் நிறுத்தமும் அறிவித்தோம்.
மேற்கொண்டு எங்களுடன் பேசுவதற்காக எங்களுடைய போன் எண்ணையும் கொடுத்தோம்.
ஆனால் அவர்கள் இந்த போன் எண்ணில் இதுவரை பேசவில்லை. அவர்களுக்கு 6ம் தேதிவரை 3 நாட்கள் கெடு விதிக்கிறோம்.
அதற்குள் எங்களுடன் பேசவில்லை என்றால் வேறு முடிவுகளை எடுக்க வேண்டியது வரும்.
மத்திய அரசுக்கு உண்மையிலேயே பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்று அக்கறை இல்லை. இதனால் தான் இதுவரை எங்களுடன் பேசவில்லை.
அத்துடன் போர் நிறுத்தம் அறிவித்த பிறகு எங்கள் முன்னணி தலைவர் வெங்கடேசுவர ரெட்டி என்கிற தீபக்கை கைது செய்துள்ளனர்.
பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் தீபக்கையும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட முன்னணி தலைவர்களையும் நிபந்தனையின்றி உடனே விடுவிக்க வேண்டும்.
மத்திய அரசுடன் உட்கார்ந்து பேச தயாராக இருக்கிறோம். பேச்சு வார்த்தை தொடர்வது அவர்கள் கையில்தான் உள்ளது' எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications