அப்பாவி காஷ்மீர் சிறுவன் கொலை-பி.எஸ்.எப். அதிகாரி கைது
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அப்பாவி சிறுவன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.
காஷ்மீரல் அப்பாவி கொலை விவகாரத்தில் கடந்த 20 வருடங்களில் துணை ராணுவப் படையைச் சேர்ந்த அதிகாரி கைது செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.
ஷாலிமார் பகுதியைச் சேர்ந்த ஷகீத் ஃபாரூக் (16) தனது நண்பர்களுடன் சென்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். இதில் எல்லைப் பாதுகாப்பு படை கமாண்டரான ரன்வீர் குமார் பிர்டிக்கு தொடர்பு உள்ளதாக புகார் எழுந்தது.
இதையடுத்து பிர்டி முன்ஜாமீன் கோரி கோர்ட்டை அணுகினார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
இதையடுத்து பிர்டியை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்து அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். ராணுவத் துப்பாக்கி மூலம் சிறுவனை பிர்டி கொன்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஸ்ரீநகர் சிறப்பு எஸ்.பி. ஜாவீத் ரியாஸ் பீதார் கூறுகையில், பிர்டி மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் எங்களிடம் ஒப்படைத்துள்ளனர்.
சனிக்கிழமை பிர்டி மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும். நான்கு நாள் போலீஸ் காவலிலும் அவரை எடுத்துள்ளோம் என்றார்.
இதற்கிடையே பிர்டியின் வக்கீல் மோல்வி அஜாஸ் அகமது கூறுகையில், பிர்டி தானாகவே ஸ்ரீகநகர் எஸ்.பியிடம் சரணடைந்தார். எனது கட்சிக்காரர் விசாரணைக்கு ஒத்துழைக்கு தயாராகவே உள்ளார். இதன் காரணமாகவே முன்ஜாமீன் மனுவை அவர் வாபஸ் பெறுமாறு என்னிடம் கூறினார் என்றார்.
முன்னதாக பிப்ரவரி 13ம் தேதி பிர்டி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து 13 எல்லைப் பாதுகாப்புப் படையினரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சிறுவன் ஷாகீத் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் பெரும் போராட்டம் வெடித்தது. இதில் 120 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications