அமைச்சரின் பாதுகாப்புக்கு சென்ற போலீசார் பொது இடத்தில் திடீர் ரகளை
சிதம்பரம்: சிதம்பரத்தில் மத்திய அமைச்சரின் பாதுகாப்புக்காக வந்த போலீசார், துப்பாக்கியால் அடித்து கார் கண்ணாடியை உடைத்து டிரைவர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
மத்திய அமைச்சர் நாராயணசாமி கடலூர் வழியாக காரைக்கால் சென்றார். அவருக்கு கடலூர் மாவட்ட எல்லையில் இருந்து கடலூர் மாவட்ட போலீசார் சுமோவில் பாதுகாப்புக்குச் சென்றனர்.
அப்போது, நந்தனார் பள்ளி அருகே அமைச்சரின் காரை அம்பாசிடர் கார் ஓவர்டேக் செய்துக் கொண்டு சென்றது.
அமைச்சரின் காரை தொடர்ந்து பாதுகாப்பு போலீசாரின் சுமோ கார், அம்பாசிடர் காரை முந்திச் செல்ல முயன்ற போது எதிரில் வந்த மகேந்திரா ஜீப் மீது மோதியது.
இதில், போலீசார் சென்ற சுமோவின் முன்பகுதி சேதமடைந்தது. இதனால், ஆத்திரமடைந்த அமைச்சரின் பாதுகாப்பிற்கு வந்த போலீசார் சுமோவிலிருந்து இறங்கி, அந்த அம்பாசிடர் கார் கண்ணாடியை துப்பாக்கி கட்டையால் அடித்து உடைத்தனர்.
மேலும், டிரைவர் வைரக்கண்ணுவை தாக்கினர். அப்போது அந்த வழியாக கர்ப்பிணி பெண்ணை ஏற்றி வந்த மற்றொரு அம்பாசிடர் கார் டிரைவர் இஸ்மாயில், மக்கள் கூட்டம் ரோட்டில் திரண்டு இருக்கவே ஹாரன் அடித்தார்.
இதிலும், ஆத்திரமடைந்த போலீசார், அந்த கார் டிரைவர் இஸ்மாயிலையும் தாக்கினர். இதனால் ஆவேசம் அடைந்த அந்த பகுதி மக்கள் காரில் வந்த கர்ப்பிணி பெண்ணை வேறு காரில் அனுப்பி வைத்ததோடு, போலீசாரை கண்டித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த டி.எஸ்.பி. மூவேந்தன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் செய்தார். இதனையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.












Click it and Unblock the Notifications