கர்நாடக அதிமுக உடைந்தது- புதுக் கட்சி தொடக்கம்- தொடங்கியவர்களை நீக்கிய ஜெ.

இதுதொடர்பாக ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கை:
மார்ச் 28-ந்தேதி பெங்களூர் மாநகராட்சிக்கு நடைபெற உள்ள தேர்தலில் சிவிக் ஃபிரண்ட் என்ற அமைப்புடன் இணைந்து அதிமுக போட்டியிடுவதாக வெளிவந்துள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் 14 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். வேறு எந்த கட்சியுடனோ அல்லது அமைப்புடனோ அ.தி.மு.க. கூட்டணி வைக்க வில்லை.
கர்நாடக மாநில கழக முன்னாள் அவைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணராஜ் கர்நாடகா அ.தி.மு.க. என்ற புதிய கட்சியை தொடங்கி சிவிக் ஃபிரன்ட் என்ற அமைப்புடன் இணைந்துள்ளதாகவும், அந்த அமைப்பு 55 இடங்களில் போட்டியிடப் போவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
அ.தி.மு.க.வுக்கும், கர்நாடகா அ.தி.மு.க. என்ற புதிய கட்சிக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.
கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.ஆர்.கிருஷ்ணராஜ் கே.மூர்த்தி (பெங்களூர்), ஜி.அப்பு (பெங்களூர்) ஆகியோர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications