நக்சல் பாதித்த மாநிலங்கள் உஷாராக இருக்க மத்திய அரசு அறிவுறுத்தல்
டெல்லி: நக்சல் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் உச்சக்கட்ட உஷார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேற்குவங்கம், ஜார்க்கண்ட, ஒரிசா உள்ளிட்டப் பகுதிகளில் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் 20க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜார்க்கண்ட் மாநிலத்தின் பொகாரோ பகுதியில் இரண்டு மாவோயிஸ்ட் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரத்து 800 கிலோ வெடிப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதுபோன்ற தொடர் நடவடிக்கைகளால் மாவோயிஸ்டுகள் ஆத்திரமடைந்திருக்கக் கூடும். போலீசார் மற்றும் அரசாங்கத்துக்கு பதிலடி கொடுக்க அவர்கள் திட்டமிடலாம்.
எனவே நக்சல் பாதித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு, உச்சக்கட்ட உஷார் நிலையில் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.