கோவாவில் ரஷ்யப் பெண் மர்ம மரணம்- கொலையா?
பனாஜி: ரஷ்யாவைச் சேர்ந்த 33 வயதுப் பெண் கோவா ஹோட்டலில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
வடக்கு கோவாவில், அரம்பரா என்ற பகுதியில் உள்ள ஹோட்டலில் அவரது பிணம் நேற்று இரவு கண்டெடுக்கப்பட்டது.
இறந்தவரின் பெயர் எலினா. இவர் மட்டும் தனியாக தங்கியிருந்தார். நேற்று இரவு 10 மணியளவில் அவர் கடைசியாக மற்றவர்களால் பார்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தேசாய் கூறுகையில், இந்தப் பெண் டூரிஸ்ட் விசாவில் ஆறு நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். மார்ச் 24ம் தேதி ரஷ்யா திரும்புவதாக இருந்தார். இந்தியாவுக்கு இவர் தனியாகவே வந்துள்ளார் என்றார்.
இவரது அறையிலிருந்து எந்த சப்தமும் வராததால் குழப்பமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் மாற்றுச் சாவி மூலம் கதவைத் திறந்து பார்த்தபோது அந்தப் பெண் இறந்து கிடந்தது தெரிய வந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
கதவு உள்பக்கமாக மூடிக் கிடந்தது. இவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவில்லை. பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர்தான் இதுகுறித்துத் தெரிய வரும் என்று போலீஸார் கூறியுள்ளனர்.
கோவாவுக்கு ஆண்டு தோறும் 40 ஆயிரம் ரஷ்யர்கள் வருகிறார்கள். சமீப காலமாக ரஷ்யர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளது.
சமீப காலமாக கோவாவில் நடைபெற்று வரும், வெளிநாட்டினருக்கு எதிரான குற்றச் செயல்களால் அதன் பெயர் பெருமளவில் கெட்டுப் போயுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ரஷ்ய சிறுமி ஒருவரை ஒரு நபர் கற்பழித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு பெண் அமைச்சர் ஒருவரின் மகன் மற்றும் கூட்டாளிகளால் கடத்தப்பட்டு கற்பழித்துக் கொல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரஷ்யப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.












Click it and Unblock the Notifications