For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணத்துக்காக பள்ளிச் சிறுவனை கடத்திய கும்பல்- 20 நிமிடத்தில் மடக்கிப் பிடித்த போலீஸ்

By Staff
Google Oneindia Tamil News

3 Accusts
மதுரை: பணம் கேட்டு மிரட்டுவதற்காக பள்ளிச் சிறுவனை வேனில் கடத்திச் சென்ற கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்தனர். கடத்தப்பட்ட 20 நிமிட நேரத்திலேயே சிறுவன் மீட்கப்பட்டான்.

மதுரை வில்லாபுரம் பராசக்தி நகரைச் சேர்ந்தவர் ராமராஜ் (43). பிளாஸ்டிக் கம்பெனி நடத்தி வரும் இவருடைய மனைவி மல்லிகா, பசுமலையில் உள்ள ஒரு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுடைய மகன்கள் பிரவீன்குமார், டி.வி.எஸ்.நகரில் உள்ள ஒரு பள்ளியில் 4ம் வகுப்பும், சந்தோஷ்குமார் அதே பள்ளியில் 7ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

நேற்று மதியம் பள்ளி முடிந்து வழக்கம் போல் இருவரும் அருகில் உள்ள டியூஷன் சென்டருக்கு சென்றனர். பின்னர் பிற்பகல் நேரத்தில் இருவரும் அந்த பகுதியில் இருந்த ஒரு பிரவுசிங் சென்டர் வாசலில் நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது ஆம்னி வேனில் வந்த இரண்டு வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பிரவீன்குமாரை வேனுக்குள் இழுத்துப் போட்டு கடத்திச் சென்றனர்.

இதைப்பார்த்து சந்தோஷ்குமார் செய்வதறியாது நின்று கொண்டிருந்தான். இதை கவனித்த காளி மகேஷ் என்பவர் தனது பைக்கை எடுத்துக்கொண்டு ஆம்னி வேனை சிறிது தூரம் வரை துரத்திச் சென்றார்.

எனினும் வேனில் சென்ற கும்பல் காளி மகேஷின் பைக்கை இடித்துத் தள்ளியது. இதனால் காளிமகேஷ் கீழே விழுந்து காயமடைந்தார்.

இதற்கிடையே பிரவுசிங் சென்டர் பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

இதனால், பல்வேறு இடங்களிலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதன்பலனாக பழங்காநத்தம் பாலம் அருகே ஆம்னி வேனை போலீசார் மடக்கிப்பிடித்தனர். பிரவீன்குமாரையும் மீட்டனர்.

சம்பவம் நடந்த 20 நிமிடங்களிலேயே போலீசாரால் மடக்கப்பட்ட கடத்தல்காரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதுகுறித்து உதவி கமிஷனர் கணேசன் கூறுகையில்,

'ரூ.10 லட்சம் பணத்திற்காக திட்டமிட்டே இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. நேதாஜி தெருவை சேர்ந்த ஆனந்தன் (21), வெங்கடேஷ் (20), ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த மனோபிரகாஷ் (20) ஆகியோர் இந்த கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட மாணவனின் தந்தை ராமராஜின் பிளாஸ்டிக் கம்பெனியில் வெங்கடேசன் 2 ஆண்டுகளுக்கு முன்பும், மனோபிரகாஷ் 3 மாதங்களுக்கு முன்பும் வேலை பார்த்து விலகியுள்ளனர்.

கடந்த சில நாட்களாகவே இந்த கடத்தலுக்கு திட்டமிட்டு அதற்காக மாணவன் பிரவீன்குமாரின் நடமாட்டத்தை நோட்டமிட்டு வந்துள்ளனர்.

ஆனந்தன் என்பவர் பிளஸ்-2 படித்து விட்டு போலீஸ் வேலைக்கு முயற்சி செய்து வந்துள்ளார். தவறான சேர்க்கை அவரையும் இதில் ஈடுபட வைத்துள்ளது.

அவர்களிடம் இருந்து வேன், 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த பாண்டியம்மாள் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்' என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X