கருப்பு பண மோசடி-பஹ்ரைன் அமைச்சர் கைது?
ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் உள்ளாட்சி மற்றும் விவசாயத்துறை இணையமைச்சராக உள்ளவர் மன்சூர் பின் ரஜாப்.
இவர் உள்நட்டிலும் வெளிநாடுகளிலும் கருப்புப் பண மோசடிளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இவரது வீட்டிலும் அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தியுள்ளதாகத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து அவர் போலீஸ் பிடியில் உள்ளதாகவும், விரைவில் அதிகாரப்பூர்வமாக அவரது கைது அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால், இது குறித்து பஹ்ரைன் அரசு எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. உள்துறை அமைச்சகத்தின் துணைச் செயலாளர் பிரிகேடியர் முகம்மத் ரஷீத் கூறுகையில், ஒரு அமைச்சரிடம் விசாரணை நடப்பது நிஜம் என்றார். ஆனால் யார் அந்த அமைச்சர் என்பதைக் கூற மறுத்துவிட்டார்.
இந்த அமைச்சர் 2009ம் ஆண்டு முதலே இந்த முறைகேடான செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரது தொலைபேசி உரையாடல்கள் கண்காணிக்கப்பட்டு வந்தன. அதன் இறுதியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற ரஷீதிடம், அவர் கைது செய்யப்பட்டுவிட்டாரா என்று கேட்டதற்கும் பதிலளிக்கவில்லை.
ஆனால், இந்தத் தகவல்களை அமைச்சர் மன்சூர் மறுத்துள்ளார். நான் கைது செய்யப்படவோ, என்னிடம் விசாரணை நடத்தப்படவோ இல்லை என்று கூறியுள்ளார்.