பழம்பெரும் நக்சலைட் தலைவர் கானு சன்யால் தூக்குப் போட்டுத் தற்கொலை
கொல்கத்தா: இந்தியாவில் மாவோயிஸ்ட் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரான கானு சன்யால் தனது சொந்த கிராமத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 78 என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்க மாநிலம் நக்சல்பாரி கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) என்ற மாவோயிஸ்ட் கட்சியை தொடங்கினார் கானு சன்யால். இங்கு தொடங்கிய இந்த நக்சல் இயக்கம்தான் இன்று விஸ்வரூபம் எடுத்து பல்வேறு பெயர்களில் விளங்கி வருகிறது.
பழம்பெரும் நக்சலைட் தலைவராக திகழ்ந்தவரான கானு சன்யால் அதே நக்சல்பாரி கிராமத்தில், இன்று தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் தொங்கிய நிலையில் அவரது உடல் கைப்பற்றப்பட்டுள்ளது.
அவருக்கு சில ஆண்டுகளாக இருதயப் பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. வலியைத் தாங்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், சமீப காலத்திய மாவோயிஸ்ட் செயல்பாடுகளால் அவர் மிகவும் வேதனையுடன் இருந்து வந்தார். இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், மாவோயிஸ்டுகள் திசை மாறி போய் விட்டதை நினைத்து பெரும் வேதனையுடன் இருந்து வந்தார் கானு சன்யால்.
குறிப்பாக இயக்கம் என்ற பெயரில் ஏழை விவசாயிகளை மாவோயிஸ்டுகள் கொல்லத் தொடங்கியது அவரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் மாவோயிஸ்ட் இயக்கத்துடனான தொடர்புகளை அவர் விட்டு விட்டு வாழ்ந்து வந்தார் என்றார்.
1932ம் ஆண்டு பிறந்த கானு சன்யால், 1969ம் ஆண்டு சிலருடன் இணைந்து சிபிஐ எம்எல் கட்சியைத் தொடங்கினார்.
அவரது நக்சல் இயக்கத்திற்கு அப்போது மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. அவரது பேச்சும், திறமையான செயல்பாடுகளும் அவருக்கு மேற்கு வங்கத்தில் பெரும் பெயரை வாங்கிக் கொடுத்தன. மகாத்மா காந்திக்கு நிகராக அப்போது அவர் பேசப்பட்டார். மீடியாவின் மொத்த ஆதரவும் சன்யாலுக்கு இருந்ததால் மிக வேகமாக வளர்ந்தார்.
இவருக்கு சீன அரசின் ஆதரவும் அப்போது இருந்து வந்தது. இதை பகிரங்கமாகவும் ஒத்துக் கொண்டார் சன்யால். பின்னர் நக்சலைட் இயக்கம் தோல்வி அடையத் தொடங்கியதும் சன்யால் தலைமறைவானார். இவருடைய நண்பரும், சிபிஐ எம்எல்லைத் தொடங்கியவர்களில் ஒருவருமான சாரு மஜூம்தார் மரணமடைந்ததற்குப் பின்னர் இயக்கம் பிளவுபட்டது.
1985ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கழகம் எம்எல் என்ற பெயரில் புதிய அமைப்பைத் தொடங்கினார். சமீபத்தில் அவர் பிரிந்து கிடந்த சிபிஐஎம்எல்லின் அனைத்துப் பிரிவுகளையும் ஒருங்கிணைத்து அதன் பொதுச் செயலாளராக இருந்து வந்தார்.












Click it and Unblock the Notifications