சவுதியில் தாக்குதல் நடத்தத் திட்டம் - 113 அல் கொய்தாவினர் கைது
ரியாத் சவுதி அரேபியாவில் மிகப் பெரிய தாக்குதலை நடத்தத் திட்டமிட்டிருந்த 113 அல் கொய்தா தீவிரவாதிகளை அந்த நாட்டு ராணுவத்தினர் கைது செய்துள்ளனர்.
சவுதியில் உள்ள எண்ணைக் கிணறுகளைத் தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுத்துவதே இவர்களது திட்டமாகும். மேலும் நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து அமைதியைக் குலைக்கவும் இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இதுகுறித்து சவுதி நாட்டு உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
சவுதி அரேபியாவின் எல்லையில் உள்ள ஏமன் நாட்டைச் சேர்ந்த அல்- கொய்தா தீவிரவாதிகள் இச்சதி செயலில் ஈடுபட முயன்றனர். கடந்த 5 மாதங்களாக இவர்கள் வேட்டையாடப்பட்டு வருகின்றனர்.
கடந்த டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் அன்று அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த சதி டெட்ராய்ட்டில் வைத்து முறியடிக்கப்பட்டது. இது தொடர்பாக சவுதி அரேபியா எல்லையில் வைத்து ஏமனை சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடி பொருட்கள், கேமராக்கள், பிரீபெய்டு செல்போன் கார்டுகள் மற்றும் கம்ப்யூட்டர் போன்றவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் சவுதி அரேபியாவில் தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டிருப்பது தெரிய வந்தது என்றார்.
அல் கொய்தாவின் சதித் திட்டத்தைத் தொடர்ந்து சவுதியில், பாதுகாப்பும், கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications