இந்தியாவில் விரைவில் தொழில் தொடங்குவோம்- தொஷிபா தலைவர் தகவல்
தோஷிபா எலிவேட்டர் மற்றும் எஸ்கலேட்டர்ஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமை இயக்குநருமான சுனிசி கிமுரா கடந்த 27 மற்றும் 28ம் தேதி துபாய் வந்திருந்தார்.
நிருபர்களிடம் பேசுகையில், 'ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்னும் 5 ஆண்டுகளில் படிப்படியாக வருமானத்தை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளோம்.
2010-11 நிதியாண்டில் அமீரக திர்ஹத்தில் 300 மில்லியன் அளவிற்கு திட்டப்பணிகள் துபாய் மற்றும் அபுதாபியில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த வருடம் தோஷிபா நிறுவனம் அமீரக திர்ஹத்தில் 100 மில்லியன் அளவிற்கு திட்டப்பணிகளை அபுதாபி ரீம் ஐலேண்ட் மரினா ஸ்கொயரின் 13 உயர்ந்த கட்டிடங்களில் மேற்கொண்டு முடித்துள்ளது.
இதில் 126 லிப்டுகள் அமைக்கப் பெற்றிருக்கின்றன. இந்த வருடம் இதுவரை அமீரக திர்ஹத்தில் 140 மில்லியன் அளவிலான திட்டப்பணிகள் அதே ரீம் ஐலேண்ட்டின், சிட்டி ஆப் லைட்ஸ் என்ற பகுதியில் நடக்க உள்ளன.
சவூதி அரேபியா மற்றும் கத்தாரிலும் அங்குள்ள உள்ளூர் பங்குதாரர்களுடன் இணைந்து தொழில் தொடங்க ஆயத்தமாகி வருகிறோம்.
இந்திய சந்தை மிகப்பெரிய பன்னாட்டு சந்தையாக உருவெடுத்து இருப்பதால் அங்கு கூடிய விரைவில் தொழில் தொடங்க உள்ளோம்' என்றார்.
அப்போது ராயல் குரூப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முஹம்மமத் இக்பால், கட்சுகிகோ இவாசகா, நவோகி கண்டா, கஸுவோ புகாஜவா, கஜுனாரி ஹிராயாமா, இஸோ ஷோஜி மற்றும் முக்கிய நிர்வாகிகளும், தாஹர் அல் முகைரியின் பொது மேலாளர் அபூபக்கர் உடனிருந்தனர்.
தைவானின், தாய்பேயில் உள்ள Taipei 101 கட்டிடம், சைனா டவர், ஜப்பானில் ரூப்பாங்கி ஹில்ஸ் மற்றும் அபுதாபியில் ரீம் ஐலேண்ட் அகியவற்றில் அதிவேக லிப்ட் பொருத்தியது மட்டுமன்றி, டபுள் டெக்கர் லிப்டுகளை அதிகளவில் ஜப்பான் மற்றும் சீனாவில் பொருத்தி உள்ளது தோஷிபா என்பது குறிப்பிடத்தக்கது.