பஸ் நிலையத்தில் மெழுகு தடவி விற்கப்பட்ட ஆப்பிள் பழங்கள் பறிமுதல்!
நெல்லை: பாளை பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் மெழுகு தடவிய ஆப்பிள் மற்றும் வேதியல் கலப்பட திராட்சைகள் கைப்பற்றப்பட்டன.
ஆப்பிள் பழங்கள் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக மேல் பகுதியில் மெழுகு தடவி, கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக பல்வேறு இடங்களிலும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
மெழுகு தடவிய ஆப்பிள், கெமிக்கல் பவுடர் திராட்சையை சாப்பிட்டால் மனித உடலில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதோடு, நாளடைவில் உயிரே முடிவுகட்டக்கூடிய ஆபத்துகள் உள்ளன.
ஆனால், பல்வேறு ஊர்களிலும், குறிப்பாக பேருந்து நிலையங்களில் இதுபோன்ற விற்பனை நடந்து வருகிற்து. சில பெரிய பெரிய செயின் சூப்பர் மார்க்கெட்டுகளிலும், நாள்பட்ட பழங்களை இதுபோன்று பளபளப்பு ஏற்றி விற்பதாகவும் புகார்கள் வருகின்றன.
இந்நிலையில், நெல்லை அருகே பாளை பேருந்து நிலையத்தில் நெல்லை மாநகராட்சி சுகாதார அதிகாரி கலுசிவலிங்கம் தலைமையில் இரு குழுவினர் இதுதொடர்பாக ஆய்வு செய்தனர்.
நெல்லை ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் உணவு ஆய்வாளர் சங்கரலிங்கம் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அரசகுமார், கல்யாண்குமார், சுப்பிரமணியம் அடங்கிய குழுவினர் பழக்கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில் மெழுகு தடவிய ஆப்பிள், சாக்ரீன் கலந்த கரும்பு சாறு, அழுகிய பழங்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.11 ஆயிரம் ரூபாய்.
பாளை புதிய பேருந்து நிலையத்தில் உணவு ஆய்வாளர் காளிமுத்து தலைமையில் சுகாதார ஆய்வாளர் சாகுல் கமீது, முருகேசன், பெருமாள், பாலு, ஆறுமுகம் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தினர்.
அதில் கெமிக்கல் பவுடர் தடவிய திராட்சை பழங்கள், மெழுகு தடவிய ஆப்பிள் அழுகிய பழங்களால் ஆன ஜூஸ், சுகாதாரமற்ற தண்ணீர், குளிர்பானங்கள் உள்பட ரூ.10 ஆயிரம் மதிப்பிலான பழங்கள் கைப்பற்றப்பட்டன. இப்பழங்கள் கிருமி நாசினி மூலம் அழிக்கப்பட்டன.
மெழுகு ஆப்பிள், கெமிக்கல் திராட்சைகள், அழுகிய பழங்கள் பஸ் ஸ்டாண்டில் யாராவது விற்றால் உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர்.












Click it and Unblock the Notifications