மதுரை 'ஐடி பார்க்' ஆகஸ்டில் தொடங்கும் - அமைச்சர் தகவல்
சென்னை: மதுரை தொழில்நுட்பப் பூங்கா வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படத் தொடங்கும் என்று தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கையில் அமைச்சர் இத்தகவலை தெரிவித்தார்.
இதுபற்றி அமைச்சர் பூங்கோதை மேலும் தெரிவிக்கையில், 'தமிழகத்தில் சென்னை உட்பட எட்டு மாவட்டங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு இதற்காக ரூ.715 கோடி முதலீடு செய்துள்ளது. இந்தியாவிலேயே தகவல் தொழில்நுட்ப பூங்காவுக்கு அதிகம் செலவிடுவது தமிழகம் தான்.
மதுரையில் அமைக்கப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்பப் பூங்கா வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் செயல்படத் துவங்கும்.
நெல்லை, கோவை, திருச்சி, சேலம், ஒசூர், மதுரை உள்ளிட்ட இடங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கும் வேலைகள் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த தொழில்நுட்பப் பூங்காக்களின் மூலமாக சுமார் நான்கு லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்' என்றார்.