மீனாட்சி சுந்தரத்தின் 4 கூட்டாளிகளுக்கு சென்னை கோர்ட்டில் ஜாமீன் மறுப்பு
சென்னை: காலாவதி மருந்து வழக்கில் கைதாகியுள்ள மீனாட்சி சுந்தரத்தின் அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த நான்கு பேரின் ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை செஷன்ஸ் கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.
காலாவதி மருந்து வழக்கில் கைதான மீனாட்சி சுந்தரத்தின் அலுவலகத்தில் பணியாற்றி வரும் கோவேந்தன், கிருபாகரன், விஜயக்குமார், ராமகிருஷ்ணன் ஆகியோர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று நீதிபதி தேவதாஸ் முன்பு விசாரணைக்கு வந்த்து. அப்போது அரசு வழக்கறிஞர் ஷாஜகான் ஆஜராகி, இந்த வழக்கில் இன்னும் விசாரணை முடியவில்லை. மேலும், காலாவதி மருந்து விற்பனையில் கிடைத்த லாபத்தில் இந்த நான்கு பேருக்கும் பங்கு உள்ளது. இதை மீனாட்சி சுந்தரத்துடன் சேர்த்து இவர்களும் அனுபவித்துள்ளனர்.
எனவே இவர்களுக்கு ஜாமீன் தரக் கூடாது என்று வாதாடினார். இதை ஏற்ற நீதிபதி தேவதாஸ், ஜாமீன் மனுக்களைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதற்கிடையே, மீனாட்சி சுந்தரம் சார்பில் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவும் இன்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்த்து.
அப்போது அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், மீனாட்சி சுந்திரத்தின் மனைவி சாத்தம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், காலாவதி மருந்து வழக்கை மருந்துக் கட்டுப்பாட்டுதுறைதான் விசாரிக்க முடியும். காவல்துறை நடவடிக்கை எடுக்க முடியாது என்று கோரியுள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. அதில் மீனாட்சி சுந்தரத்திற்கு ஆதரவாக தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம்.
எனவே ஜாமீன் மனு மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்ற நீதிபதி தேவதாஸ், ஜாமீன் மனு மீதான விசாரணையை ஏப்ரல் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications