வேலை நேரம் முழுக்க மது கிடைக்காத கோபத்தில் ஸ்டிரைக்கில் குதித்த ஊழியர்கள்!
கோபன்ஹேகன்: மதிய உணவு நேரத்தில் மட்டும்தான் மது குடிக்க வேண்டும்... அதுவும் பீர் மட்டும்தான் குடிக்க வேண்டும் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் கோபமடைந்த டேனிஷ் மது தொழிற்சாலை ஊழியர்கள் ஸ்ட்ரைக்கில் குதித்துள்ளனர்!
டேனிஷ் மது உற்பத்தி மற்றும் மொத்த இருப்பு கிடங்கில் பணியாற்றும் ஊழியர்கள் முன்பெல்லாம் எவ்வளவு வேண்டுமானாலும் குடிக்கலாம், எந்த வகை மதுவையும் ருசி பார்க்கலாம் என்ற நடைமுறை இருந்தது. குறிப்பாக மதிய உணவு வேளையில் விரும்பிய மட்டும் குடிப்பார்களாம்.
வேலை செய்யும் இடத்துக்குப் பக்கத்திலேயே பீர் கூலர்களை வைத்து, அதில் ஏராளமான பீர் பாட்டில்களை வைத்திருப்பார்களாம். தண்ணீர் குடிப்பதைப் போல, வேண்டும்போது ஜில்லென்று குடித்துக்கொண்டே வேலை செய்வது அவர்கள் வழக்கமாம்.
ஆனால் இந்த நிலையை மாற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக திட்டமிட்டு வந்ததாம் நிர்வாகம். ஒருவழியாக இப்போது கட்டுப்பாடுகளை அமலுக்குக் கொண்டுவந்துள்ளது. பணியிடத்தில் இருந்த பீர் கூலர்களை அப்புறப்படுத்திவிட்டார்களாம். அதேபோல, மதிய உணவின்போது குறிப்பிட்ட அளவு மட்டுமே பீர் தரப்படுகிறதாம்.
பல ஆண்டுகளாக கணக்கில்லாமல் குடித்துப் பழகிவிட்ட ஊழியர்கள் இதில் பயங்கர டென்ஷனாகிவிட்டார்களாம்.
இதனால் உடனடியாக ஸ்ட்ரைக்கை அறிவித்த அந்த தொழிற்சாலையின் 800 ஊழியர்கள், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 250 பேர், இந்த வேலையே வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம்.
இந்த ஸ்ட்ரைக்கில் பீர் வேன் / லாரி ஓட்டும் டிரைவர்களும் இணைந்துள்ளனர். அவர்கள் ஓட்டும் லாரிகளில் பீர் பாட்டில்களை அடுக்கி பூட்டுப் போட்டுவிடுகிறதாம் நிர்வாகம். இதனால், தாகத்துக்கு பீர் குடிக்க முடியவில்லையே என்ற கோபத்தில் இந்த ஸ்ட்ரைக்கில் இறங்கிவிட்டார்களாம்!












Click it and Unblock the Notifications