கி.மீக்கு ரூ.2.8 நஷ்டத்தில் ஓடும் அரசு பஸ்கள் - அமைச்சர் தகவல்
சென்னை: ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய் 80 பைசா நஷ்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது நேரு இதைத் தெரிவித்தார்.
போக்குவரத்து துறை தொடர்பாக உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளிக்கையில்,
'கடந்த 2006ம் ஆண்டு தமிழக அரசு சார்பில் மொத்தம் 18 ஆயிரத்து 200 பேருந்துகள் இருந்தன. இன்றைக்கு மொத்தம் 20 ஆயிரத்து 230 பேருந்துகள் இருக்கின்றன.
கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 2 ஆயிரம் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 3 ஆயிரம் வழித்தடங்கள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 12 ஆயிரத்து 300 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 3 ஆயிரம் பேருந்துகள் வாங்க மானிய கோரிக்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு வருடத்தில் பழைய பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்துகளாக மாற வாய்ப்பு உள்ளது. ஒரு பேருந்தின் வயது 7.8 என்று இருந்ததை கடந்த 4 ஆண்டு காலத்தில் 6.3 என்று குறைத்துள்ளோம்.
புதிய வழித்தடங்களை உருவாக்கும் போதும், புதிய பஸ்களை இயக்கும் போதும் வரவு-செலவில் நாகர்கோவிலில் மட்டும் ஒரு நாள் ஒன்றுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் 16 காசு நஷ்டம் ஏற்படுகிறது.
இந்தாலும் அந்த நஷ்டத்தை அரசு ஏற்றுக்கொண்டு வருடம் தோறும் 3 ஆயிரம் புதிய பேருந்துகளை முதல்வர் கருணாநிதி வழங்கிக்கொண்டு இருக்கிறார். பேருந்துகள் பிரேக்டவுன் ஆவதை நாங்கள் ஜீரோ சதவீதத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
நகர பேருந்து என்றால் நாள் ஒன்றுக்கு ரூ.5,500 வசூல் ஆகவேண்டும். புறநகர் பேருந்து என்றால் ரூ.8,500 வசூல் ஆகவேண்டும்.
1500 மக்கள் இருக்கும் இடங்களில் சாலைகள் இணைக்கப்பட்டன. தொடர்ந்து இப்போது 500 மக்கள் இருக்கும் இடங்களுக்கு சாலைகள் இணைக்கப்படுகின்றன. 150 மக்கள் இருக்கும் இடத்திற்கு கூட பஸ்கள் இயக்கவேண்டும் என்று அரசு அணை பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து துறை என்பது லாபம் சம்பாதிக்கும் துறை அல்ல. மக்களுக்கு சேவை செய்யும் துறையாகும். இதனால் ஒவ்வொரு கிலோ மீட்டரை பொறுத்தவரை தமிழ்நாடு முழுவதும் 2 ரூபாய் 80 காசு நஷ்டத்தில் தான் பேருந்துகள் இயங்கிக்கொண்டு இருக்கிறது' என்றார்.












Click it and Unblock the Notifications