ஐபில் சர்ச்சை: சசி தரூரின் பதவி பறிபோகுமா? –சோனியாவுடன் கிருஷ்ணா ஆலோசனை
டெல்லி: ஐபிஎல் கொச்சி அணி விவகாரம் தொடர்பாக சசி தரூர் சிக்கலில் மாட்டியிருக்கும் நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதையடுத்து தரூரின் பதவி பறிக்கப்படுமா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது.
சசி தரூர் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இருக்கிறார். அவர் பதவிக்கு வந்தது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பெரும்பாலான சர்ச்சைகள் அவராகவே இழுத்துக் கொண்டதுதான்.
ஆரம்பத்தில் விமானங்களில உள்ள எக்கானமி வகுப்பை மாட்டுத் தொழுவம் என்று வர்ணித்து பெரும் வசவுகளை வாரிக் கட்டிக் கொண்டார். பின்னர் வேலைப்பளு குறித்து வெகுவாக அலுத்து ட்விட்டர் மூலம் செய்தி அனுப்பி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.
பிறகு இநதியா, பாகிஸ்தான் பிரச்சினையில் சவுதி அரேபியா மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என்று பேசி புதுப் பிரச்சினையை உருவாக்கினார்.
இவரது செயல்பாடுகளால் மத்திய அரசில் உள்ள மூத்த அமைச்சர்களும், பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோரும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் தரூர் தற்போது கொச்சி ஐபிஎல் அணியை மறைமுகமாக வாங்கியிருப்பதாக பெரும் பிரச்சினையில் மாட்டியுள்ளார்.
இந்த நிலையில் இன்று சோனியா காந்தியுடன், எஸ்.எம்.கிருஷ்ணா அவசர ஆலோசனை ஒன்றை நடத்தியுள்ளார். தரூர் தொடர்பாக இந்த ஆலோசனை நடந்த்தாக தெரிகிறது. இதையடுத்து தரூரின் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏற்கனவே எஸ்.எம்.கிருஷ்ணாவுடனும் ஒரு முறை மோதியவர்தான் தரூர் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications