அழகிரியின் ராயல் கேபிள் விஷன் சென்னையிலும் கால் பதித்தது!

எம்எஸ்ஓ எனும் கேபிள் டிவி சேவை அளிப்பு நிறுவனமாக இந்த ஜாக் கம்யூனிகேஷன்ஸ் செயல்படும். இதன் பங்குதாரர்களாக மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியும் ஜாக் ஜெயராமன் மகன் கமலேஷும் உள்ளனர்.
சென்னையை அடுத்த அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர்- திருவண்ணாமலை மாவட்டங்களில் பலமான கேபிள் டிவி நிறுவனமாகத் திகழ்வது ஜாக். இதன் உரிமையாளர் ஜெயராமன், அம்பத்தூரைச் சேர்ந்தவர். ஜவுளித் தொழிலும் நடத்தி வருகிறார்.
இவர் மத்திய அமைச்சர் முக.அழகிரிக்கு மிகவும் நெருக்கமானவர். மதுரையில் ராயல் கேபிள் விஷன் எனும் பெயரில் அழகிரி கேபிள் டிவி நிறுவனம் தொடங்கியபோது, அதற்கு பெரும் துணையாக நின்றவர் இந்த ஜெயராமன். அதன் பலனாக, சென்னையில் இவரது கேபிள் டிவி நிறுவனத்துக்கு பெரும் முட்டுக்கட்டை போடப்பட்டது.
சென்னையில் முன்னணியில் இருக்கும் இன்னொரு எம்எஸ்ஓ குழுமம் இவருக்கு சேனல்கள் தர மறுத்ததும் நடந்தது. அப்போது இவருக்கு தோளோடு தோள் நின்றவர் முக அழகிரி. அந்த நேரத்தில் அழகிரிக்கும் சன் குழுமத்துக்கும் கடுமையான மோதல் நிலவி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நட்புதான் இன்று வாரிசுகள் தலைமையில் புதிய கேபிள் நிறுவனமாக மலர்ந்துள்ளது. விரைவில் இந்த நிறுவனம் தனி வர்த்தக சேவையாக சென்னை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் செயல்பட உள்ளது. இதற்கான உரிமத்தினையும் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்திடமிருந்து பெற்றுள்ளது ஜாக்.
இந்தப் புதிய நிறுவனத்தை இன்று மு.க.அழகிரி தொடங்கி வைத்தார். அவரது மனைவி காந்தி அழகிரி குத்துவிளக்கேற்றினார்.
கேபிள் ஒளிபரப்பில் புதுமையான உத்திகளையும், அதிநவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி எம்.எஸ்.ஓ. கேபிள் சேவையில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டுள்ளது ஜாக் கம்யூனிகேஷன்ஸ்.
இதற்கென ஜாக் நிறுவனம் மிகச் சிறந்த டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறையையும், உலகத் தரமிக்க தொழில்நுட்பக் கருவிகளையும் சென்னை அண்ணா நகர் அலுவலகத்தில் நிறுவியுள்ளது.
இந்த எம்.எஸ்.ஓ., தொலைக்காட்சி ஒளிபரப்பாளர்களுக்கும், கேபிள் ஆபரேட்டர்களுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படும். பல்வேறு தொலைக்காட்சி அலை வரிசைகளின் சிக்னல்களை ஒருங்கிணைத்து இந்நிறுவனம் கேபிள் தொலைக்காட்சி ஆபரேட்டர்களுக்கு வழங்க, அவற்றை ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவர்கள்.
எம்.எஸ்.ஓ. செயல்பாடு பற்றி ஜாக்கம்யூனிகேஷன்ஸ் இயக்குனர்கள் தயாநிதி அழகிரி, ஜெயராமன் கமலேஷ் கூறியதாவது:
ரயில்வே கேபிளை (ரயில் டெல் கேபிள்) நீண்ட நாள் குத்தகைக்கு எடுத்து அதன் மூலம் இணைப்பு பெற்று சென்னையில் இதை நடத்துவதால் எந்த இடையூறும் ஏற்படாது. எல்லா கேபிள்களும் பூமிக்கு அடியில் வருவதால் கேபிளும் பாதிக்கப்படாது.
சென்னையில் 17 லட்சம் இணைப்புகளை எங்கள் பக்கம் கொண்டு வரத் திட்டமிட்டு செயல்படுவோம்.
எங்கள் எம்.எஸ்.ஓ. மூலம் 84 சேனல்கள் கிடைக்கும். 144 டிஜிட்டல் சேனல்களும் இதில் உண்டு. சென்னையில் சன் டி.வி. இலவச சேனல் என்பதால் தாராளமாக தெரியும். அவர்களிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்..." என்றனர்.
திரண்டு வந்த மதுரை பிரமுகர்கள்...
இந்த நிகழ்ச்சிக்கு மதுரையிலிருந்து அழகிரியின் ஆதரவுப் பிரமுகர்கள் குவிந்துவிட்டனர் சென்னையில்.
அழகிரிக்கு நெருக்கமான அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தமிழரசி, எம்.எல்.ஏக்கள் ப.ரங்கநாதன், மாலைராஜா, சோழவந்தான் மூர்த்தி, முதுகுளத்தூர் முருகவேல், போடி லட்சுமணன், ராஜேந்திரன், கவுஸ்பாசா, மதுரை மேயர் தேன்மொழி, மிசா பாண்டியன், தேனி மாவட்ட செயலாளர் மூக்கையா, தொ.மு.ச. பேரவை பொருளாளர் சிங்கார ரத்னசபாபதி உள்ளிட்ட பலரும் தங்கள் ஆதரவாளர்களைத் திரட்டி வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications